அம்மா, எங்க ஆசிரியரை காப்பாத்துங்க: ஜெ.விடம் அரசு பள்ளி மாணவர்கள் கதறல்
புதுக்கோட்டை: உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள தங்களின் விலங்கியல் ஆசிரியரை காப்பாற்றக் கோரி கொத்தமங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளி மாணவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாநிலம் கொத்தமங்கலத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர் நிலைப்பள்ளியில் விலங்கியல் பாட ஆசிரியராக உள்ளவர் சி. ரவிச்சந்திரன்(53). அவரது சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் செயல் இழந்துவிட்டன.
இதற்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை எடுத்து வந்த அவர் புதன்கிழமை சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ரவிசந்திரனின் உயிரை காப்பாற்றுமாறு கொத்தமங்கலம் அரசு பள்ளியை சேர்ந்த சுமார் 300 மாணவர்கள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளனர். அவர் கடந்த 2011ம் ஆண்டு கொத்தமங்கலம் பள்ளியில் சேர்ந்தார்.
இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் எஸ். மேகநாதன் கூறுகையில்,
ரவிச்சந்திரனின் சிறுநீரகங்கள் செயல் இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்கிறார்கள். ரவிச்சந்திரன் எங்கள் பள்ளிக்கு பெருமை தேடித் தந்த ஆசிரியர். ஆண்டுதோறும் ஒரு மாணவரையாவது மருத்துவக் கல்லூரிக்கு அனுப்ப வேண்டும் என்ற குறிக்கோளுடன் பணியாற்றியவர் என்றார்.