வேஷ்டி தினம்: ஜனவரி 6ல் அரசு ஊழியர்கள் வேஷ்டி அணிய உத்தரவு
நெல்லை: பாரம்பரிய மரபை பறைசாற்றும் வகையில், அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் ஒருநாள் வேட்டி அணிந்து வேஷ்டி தினம் கொண்டாடுமாறு கோஆப் டெக்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதனையடுத்து ஜனவரி 6ம் தேதி நெல்லை மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் வேஷ்டி அணிந்து பணிக்கு வர மாவட்ட ஆட்சியர் கருணாகரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, நெசவு தொழில் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் ஜனவரி 6 ம் தேதி வேஷ்டி தினம் கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து , நெல்லை ஆட்சியர் கருணாகரன் வேஷ்டி விற்பனையை தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் கருணாகரன், ஜனவரி 6 ம் தேதி (திங்கள் கிழமை) பணிக்கு வரும் அனைத்து அதிகாரிகள், அலுவலர்கள் விருப்பத்துடன் வேஷ்டி அணிந்து பணிக்கு வர வேண்டும்.
ஆரோக்கியமான ஆடை அணிவதன் மூலம் அதன் மகத்துவத்தை அறியும் வாய்ப்பு ஏற்படும். நெசவாளர்களின் உழைப்பினால் உற்பத்தியாகும் கைத்தறி ஆடைகளை பொது மக்களும் விரும்பி அணிய வேண்டும் என்றார்.