தமிழகத்துக்கு முழு நேர ஆளுநரை நியமிக்க முடியாமல் மோடி அரசை தடுப்பது எது?
சென்னை: தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு உடல் நலம் சரியில்லை. காவிரி உள்ளிட்ட பிரச்சினைகளில் தமிழகத்திற்கு அடுத்தடுத்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒரு முழு நேர ஆளுநரை நியமிக்காமல் இருக்கிறது மத்திய அரசு. பொறுப்பு ஆளுநருக்குப் பதில் முழு நேர ஆளுநரைப் போடுவதற்கு என்ன தடையாக இருக்கிறது என்பதுதான் பெரும் புதிராக உள்ளது.
தமிழகத்தின் ஆளுநராக இருந்த ரோசையா பதவிக் காலம் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்துவிட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு புதிய ஆளுநரை நியமித்திருக்க வேண்டியது மத்திய அரசின் பணி.
ஆனால் ஒரு மாநிலத்துக்கு ஆளுநரைத் தேர்வு செய்யாமல் அமைதியாக இருக்கிறது மோடி தலைமையிலான மத்திய அரசு. தமிழகத்துக்கு இன்னமும் மகாராஷ்டிரா ஆளுநரான வித்தியாசகர் ராவைத்தான் பொறுப்பு ஆளுநராக நீடிக்க வைத்திருக்கிறது மோடி அரசு.

துரோகத்துக்காக அடம்
காவிரி பிரச்சனையில் தமிழகத்தின் முதுகில் குத்தும் வகையில் உச்சநீதிமன்றத்தில் வரிந்து கட்டிக் கொண்டு வாதாடி வருகிறது மத்திய அரசு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் தமிழகத்துக்கு துரோகம் செய்தே தீர வேண்டும் என அடம்பிடிக்கிறது மோடி அரசாங்கம்.

வக்காலத்து வாங்கும் தமிழக பாஜக
அதே நேரத்தில் ஜல்லிக்கட்டு பிரச்சனையில் உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டதே என போக்கு காட்டுகிறது மத்திய அரசு. ஆனால் தமிழக பாஜகவினரோ அத்தனைக்கும் வக்காலத்து வாங்கிக் கொண்டு ஊடகங்களில் தங்களது தரப்பை நியாயப்படுத்தி மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றனர்.

மதிக்காத மேலிடம்
இத்தனைக்கும் தமிழக பாஜகவினர் டெல்லிக்கு படையெடுத்து போய் அக்கட்சியின் தலைவர் அமித்ஷாவை சந்தித்தனர். ஆனால் அங்கு இவர்களை யாரும் மதித்ததாகவே தெரியவில்லை. அதை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசே வெளிப்படுத்தி விட்டது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என கச்சைகட்டிக் கொண்டு நிற்கிறது.

ஆளுநர் நியமனத்தில் ஏன் தாமதம்
இந்த நிலையில் தமிழகம் போன்ற மிகப் பெரிய மாநிலத்திற்கு ஒரு முழு நேர ஆளுநரைப் போடாமல், எங்கேயோ உள்ள மகாராஷ்டிராவிலிருந்து அங்குள்ள ஆளுநரை இங்கு பொறுப்பு ஆளுநராகப் போட்டுள்ளதன் லாஜிக்தான் புரியவில்லை, பிடிபடவில்லை.

இன்னும் எத்தனை காலத்திற்கு..!
மோடி தலைமையிலான மத்திய அரசு. இன்னமும் எத்தனை மாதங்களுக்கு பொறுப்பு ஆளுநரை வைத்திருக்கப் போகிறது என்று தெரியவில்லை. அதை நிறைவேற்றும் அக்கறையாவது மத்திய அரசிடம் உள்ளதா என்றும் தெரியவில்லை.












Click it and Unblock the Notifications