எங்களை கைது செய்தால் பல லட்சம் மடங்கு வேகத்துடன் போராட்டம் அதிகரிக்கும் - கவுதமன்
எங்களை கைது செய்தால் தற்போதைய போராட்டத்தை காட்டிலும் பல லட்சக்கணக்கான மடங்கு போராட்டம் அதிகரிக்கும் என்று கவுதமன் தெரிவித்தார்.
சென்னை: எங்களை கைது செய்தால் தற்போதைய போராட்டத்தை காட்டிலும் பல லட்சம் மடங்கு போராட்டம் அதிகரிக்கும் என்று கவுதமன் எச்சரிக்கை விடுத்தார்.
காவிரி போராட்டத்துக்கு மத்தியில் ஐபிஎல் போட்டிகள் நடத்தக் கூடாது என்று பாரதிராஜா, அமீர், சீமான், மணியரசன், கவுதமன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் சென்னை அண்ணா சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாம் தமிழர் கட்சியினர் காவலர்களை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனால் சீமான் உள்ளிட்டோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகம் வந்த பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டிய வழக்கில் பாரதிராஜா, அமீர், மணியரசன், சீமான் கவுதமன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அப்படியே காவலர்கள் தாக்குதல் வழக்கில் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நேர்மையற்றவர்கள்
இதுகுறித்து இயக்குநர் கவுதமன் கூறுகையில், காவிரிக்காக போராடிய எங்களை கைது செய்ததன் உள்நோக்கம் மத்திய அரசை திருப்திப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்கள். மத்திய அரசை திருப்திப்படுத்த வேண்டும் என்றால் நேர்மையான முறையில் திருப்திப்படுத்த வேண்டும். ஆனால் இந்த நேர்மையற்றவர்கள் இந்த பூமியை அடக்கி அழிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.

அது தகர்ந்துவிடும்
நாங்கள் வாக்களித்து எங்கள் உரிமையை மீட்டெடுக்க உதவுவார்கள் என்று நம்பினவர்களே அவர்களுக்கு துணை போகிறார்கள் என்றால் இது அறமற்ற நிலைப்பாடு. அரசு அறம் தவறினால் கோட்டையாக இருந்தாலும் சரி நினைத்து பார்க்க முடியாத மாபெரும் கூடாரமாக இருந்தாலும் சரி அது சரியும், அது தகர்ந்துவிடும்.

உரிமை குரல்
எங்கள் இனம் காக்க, உயிர் காக்க, மண் காக்க ,உயிர் காக்க, உரிமை காக்க நாங்கள் போராடுகிறோம். நாங்கள் எந்தவித அத்துமீறலையும் துன்புறுத்தலையும் செய்யவில்லை. எங்கள் உரிமை காப்பதற்கு எங்களை அழிக்க நினைக்கும் அதிகார வர்த்தகத்தினருக்கு ஜனநாயக ரீதியாக உரிமைக் குரலை எழுப்பினோம்.

எஜமானர்கள் அல்ல
ஆனால் அந்த குரலையும் எழுப்ப உரிமை இல்லை என்று எங்கள் குரல்வளையை நெரிக்கிறது என்பது ஒரு போதும் ஜனநாயகமாக ஆகாது. இது ஒன்றும் மன்னர்கள் ஆள்கிற நாடு இல்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களால் ஆளப்படுகிறதுதான். இவர்கள் எங்களுடைய எஜமானர்கள் அல்ல. பிரதமராக இருந்தாலும் முதல்வராக இருந்தாலும் இவர்கள் எங்கள் வேலைக்காரர்கள்.

அரசு ஆள்பவர்கள்
மக்களுக்கு ஊழியம் செய்கிறோம் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என்று தான் வருகிறார்கள். ஆனால் அதை மறந்துவிட்டு எஜமானர்களாகவும் கொடூரர்களாகவும் வலம் வருகிறார்கள். இந்த நாற்காலிக்கு நாங்கள் தகுதி இல்லாதவர்கள் , எங்களை நீங்கள் தேர்ந்தெடுக்காதீர்கள் என்று சொல்வது போல் உள்ளது. அரசு ஆள்பவர்கள் தாய்மை குணத்தோடு இருந்தால் மட்டுமே மண் செழிக்கும் , மக்கள் மகிழ்ச்சியாக வாழ்வர்.

போராட்டம் தீவிரமடையும்
சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மட்டும் ஒரு இடத்தில் உள்ளனர். அங்கு அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளனர். எங்களை தாராளமாக கைது செய்து கொள்ளுங்கள், நாங்கள் யாரையும் அழிக்கவோ கொள்ளையடிக்கவோ கொலை செய்யவோ போராடவில்லை. எங்களை கைது செய்தால் இப்போது நடக்கும் போராட்டத்தை காட்டிலும் பல நூறு மடங்கு, பல ஆயிரம் மடங்கு, பல லட்சம் மடங்கு போராட்டத்தில் உலக தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர். குனிந்த தலையை நிமிர முடியாத அளவுக்கு ஜனநாயக ரீதியாக எங்கள் தமிழினம் பதிலடியும் கொடுக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications