கிரானைட் முறைகேடு: 9ம் கட்ட ஆய்வு நடத்த மதுரை வரும் சகாயம்
மதுரை: கிரானைட் முறைகேடுகள் குறித்து அளிக்கப்பட்டுள்ள புகார்களை விசாரிக்க 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கிரானைட் முறைகேடு குறித்து 9ம் கட்ட ஆய்வு நடத்த உள்ளார்.
கிரானைட் முறைகேடு குறித்து ஐஏஎஸ் அதிகாரி சகாயம் மதுரையில் தங்கி ஆய்வு நடத்தினார். அப்போது பொது மக்கள், விவசாயிகள், போலீசார் என பலர் சகாயத்தை சந்தித்து முறைகேடு குறித்து புகார் மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி. விஜயேந்திர பிதாரிக்கு சகாயம் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின்பேரில் புகார்கள் குறித்து விசாரிக்க கூடுதல் உதவி கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்இன்ஸ்பெக்டர்கள், 5 தலைமை காவலர்கள் அடங்கிய 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்து குழு புகார் அளித்த 30 பேரிடம் இதுவரை விசாரித்துள்ளது.
அந்த குழு முன்பு பொதுமக்கள், விவசாயிகள், போலீசார், ஓய்வு பெற்ற போலீசார் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்த விசாரணையின்போது புகாருக்குள்ளான எதிர்தரப்பினரும் வரவழைக்கப்பட்டு அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது. புகார் உண்மை என்று தெரிய வருகையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு தொடரப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சகாயம் விசாரணை குழுவின் கால அவகாசத்தை மேலும் 8 வாரம் நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 9ம் கட்ட ஆய்வு நடத்த சகாயம் மதுரை வருகிறார்.
இதற்கு முன்பு நடந்த விசாரணையின்போது அவர் பல்வேறு இடங்களுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். தற்போது அவர் அலுவலகத்தில் அமர்ந்து அறிக்கை தயாரிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.