கிரானைட் முறைகேடு: இன்றுடன் விசாரணையை முடிக்கும் சகாயம்
மதுரை: மதுரை வாட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்த விசாரணையை சகாயம் இன்று முடிக்கிறார்.
மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு பற்றி ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கடந்த 2 மாதங்களாக விசாரணை நடத்தி வருகிறார். இதற்காக மதுரையில் முகாமிட்டுள்ள அவரை சந்தித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், போலீசார் ஆகியோர் தங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி அளித்தனர்.

சகாயம் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிரானைட் குவாரிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. அவர் ஆறு கட்ட விசாரணையை முடித்திருந்தார். விசாரணையின்போது அவர் 17 குவாரிகளின் உரிமையாளர்களுக்கு சம்மன் அனுப்பியிருந்தார். ஆனால் அவர்கள் தங்கள் சார்பில் வழக்கறிஞர்களை விசாரணைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் பி.ஆர்., ஒலிம்பஸ் உள்ளிட்ட 3 கிரானைட் குவாரிகளின் உரிமையாளர்கள் சார்பில் அவர்களின் வழக்கறிஞர்கள் இன்று சகாயம் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். கடந்த 16ம் தேதி 7வது மற்றும் இறுதிகட்ட விசாரணையை துவங்கினார் சகாயம். இந்த இறுதி கட்ட விசாரணை இன்றுடன் முடிகிறது. இதையடுத்து அவர் விசாரணை குறித்த அறிக்கையை விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒலிம்பஸ் மனு தள்ளுபடி:
சகாயம் விசாரணை தொடர்பாக ஒலிம்பஸ் கிரானைட் நிறுவன அதிபர் தாக்கல் செய்த மனுவை மதுரை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஒலிம்பஸ் கிரானைட் நிறுவன இயக்குனர் பாலசுப்பிரமணியன் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
மதுரை மாவட்டம் கீழவளவில் 1.21 ஹெக்டேர் பரப்பளவில் கடந்த 20 ஆண்டுகளாக கிரானைட் குவாரி அமைத்து தொழில் செய்து வருகிறோம். சட்ட விரோதமாக கிரானைட் வெட்டி எடுத்தது தொடர்பாக கலெக்டர் விளக்கம் கேட்டார். இதன் அடிப்படையில் எங்கள் மீது குற்றவழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முன்ஜாமீனும் பெற்றுள்ளோம். எங்கள் நிறுவனம் மீதுள்ள குற்ற வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம். அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு குறித்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயத்தை நியமித்து குவாரிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
ஆனால் அதற்கு மாறாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க இன்று (19-ந் தேதி) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சகாயம் சம்மன் அனுப்பி உள்ளார். இதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. எனவே அவர் அனுப்பிய சம்மனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழ்வாணன் மற்றும் ரவி ஆகியோர் கூறுகையில், கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி நடக்கும் விசாரணையில் நாங்கள் தலையிட முடியாது. அதனால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications