தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம்.. இயக்குனர் பாரதிராஜா
தமிழன் வேறு எங்கும் சென்று அரசியல் செய்ய முடியாது. ஆனால் யார் வேண்டுமானாலும் தமிழகத்தில் வந்து அரசியல் செய்யலாம் என்று இயக்குனர் பாரதிராஜா கூறினார்.
சென்னை: தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என இயக்குனர் பாரதிராஜா புத்தக வெளியீட்டு விழாவில் மறைமுகமாக ரஜினியை சாடியுள்ளார்.
கடந்த ஒரு வாரமாக எங்கு திரும்பினாலும் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய யூகங்களும், விமர்சனங்களும் தான் பேச்சாக உள்ளது. தற்போது தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை போக்க ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம்.
தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழலில் ரஜினி தனிக் கட்சி தொடங்குவாரா அல்லது தேசியக் கட்சியுடன் கூட்டணி சேருவாரா என்ற விவாதமும் ரெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துவிட்டது. ரஜினி அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
அதேபோல் ரஜினிக்காக பாஜகவின் வாயிற் கதவுகள் திறந்தே உள்ளது என்று அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷாவும் அழைப்பு விடுத்துவிட்டார். ரஜினியின் பேச்சுக்கு ஒரு பக்கம் ஆதரவும், மற்றொரு பக்கம் எதிர்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் சென்னை வடபழனியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் பாரதி ராஜா தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் என மறைமுகமாக ரஜினியை சாடியுள்ளார். மேலும் அவர் பேசுகையில், ஜி.எஸ்.டி. மசோதா தமிழ் சினிமாவையும், தமிழ் கலாசாரத்தையும் மெல்ல மெல்ல அழிக்கும் முயற்சி.
தமிழன் வேறு எங்கும் சென்று தொழில் செய்ய முடியாது. மற்றவர்கள் இங்கு வந்து தொழில் செய்யலாம். அதேபோல் தமிழன் வேறு எங்கும் சென்று அரசியல் செய்ய முடியாது. ஆனால் யார் வேண்டுமானாலும் தமிழகத்தில் வந்து அரசியல் செய்யலாம் என்றார்.