ஜிஎஸ்டி வரி: வாடகை வீட்டில் வசிப்போருக்கு என்ன பாதிப்பு! #gstrollout #GSTTryst #GST
ஜிஎஸ்டி வரி விதிப்பில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு 5 சதவீத்ம் கூடுதல் வரிச்சுமை ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
சென்னை: ஜிஎஸ்டி வரியால் வாடகை வீட்டில் இருப்போருக்கும் வரிச்சுமை ஏற்படும் வாய்ப்பிருப்பதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்தின் கீழ் ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறை நடைமுறைக்கு வருகிறது. இந்த வரி முறை குறித்து பலருக்கும் பல விதமான சந்தேகங்கள் உள்ளன.
புதிய வரி முறையால் தங்களுக்கு பாதிப்பு இருக்குமா என்று வணிகர்கள், ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மட்டுமின்றி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத ஒரு வரி முதன்முறையாக அமல்படுத்தப்படுவதே இந்த அச்சத்திற்கு காரணம் என்றும் கூறுகின்றனர். இந்நிலையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களுக்கு ஜிஎஸ்டி வரியால் என்ன பாதிப்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
சொத்து வரியை மத்திய அரசு ஜிஎஸ்டியில் இணைக்காததால், மாநில அரசுகளின் சட்டப்படி குறிப்பிட்ட சதவீதம் சொத்து வரியை ஆண்டுதோறும் வாடகைக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள் செலுத்த வேண்டியிருக்கும். இதே போன்று வருடாந்திர பராமரிப்புக் கட்டணத்தின் மீதான வரி தவிர மின்சாரக் கட்டணம், குடிநீர் இணைப்புக் கட்டணம் ஆகியவற்றின் மீதான வரிகளையும் தனியாக செலுத்த வேண்டும்.
சீரமைப்பு பணி மீதான வரி
வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் இது வரை மாத பராமரிப்பு கட்டணம் கொடுத்து வந்திருப்பவர். கட்டடத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அந்தப் பணியை உரிமையாளர் செய்ய வேண்டும் என்பது தான் அமலில் உள்ளது. இனி கட்டிட சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டால் குடியிருப்பின் உரிமையாளர் அதற்கு செலவிடும் தொகையின் மீது விதிக்கப்படும் 18% வரியும் வாடகைக்குக் குடியிருப்போர் தலையில் தான் வந்து விழும்.
கூடுதல் வரி
ஆண்டுதோறும் ரூ.20 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் ஈட்டும் குடியிருப்புகள் கூடுதலாக ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டியிருக்கும். ஆனால், ரூ.75 லட்சத்திற்குக் குறைவாக வருமானம் ஈட்டும் குடியிருப்புகள் காம்போசிஷன் திட்டத்தில் இணைவதன் மூலம் நிலையான ஒரு தொகையை வரியாக செலுத்தினால் போதும்.
வரியை தவிர்ப்பது எப்படி?
பெரிய குடியிருப்பிற்கு கட்டும் வரியில் இருந்து தப்பிக்கவும் ஒரு வழி இருக்கிறது. அதாவது ரூ.20 லட்சத்துக்கு குறைவான வருமானம் அளிக்கும் சிறுசிறு குடியிருப்புகளாகப் பிரிப்பதன் மூலமும் இந்த வரியைத் தவிர்க்கலாம் என்று ஆலோசனை கூறுகின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
2.5 சதவீதம் வரிச்சுமை
ரூ.5000க்கு அதிகமான வருடாந்திர பராமரிப்புக் கட்டணம் வசூலிக்கும் குடியிருப்புகளில் தற்போது 15.55% வரி விதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டியில் இந்த வரி சதவீதம் 18%ஆக உயர்கிறது. இதனால், கூடுதலாக 2.5% வரிச்சுமை பராமரிப்புக் கட்டணத்தின் வாயிலாக ஏற்படும்.