கிருஷ்ணகிரி விபத்து பற்றி தகவல் அறிய ஹெல்ப்லைன் நம்பர் 1299
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தனியார் பஸ் மற்றும் கார் மீது, நிலக்கடலை ஏற்றி சென்ற லாரி மோதிய கோர விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து மேலதிக தகவல் அறிய விரும்புவோருக்காக 1299 என்ற கட்டணமில்லா உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 33 பயணிகளுடன், ஒசூர் மார்க்கத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பஸ்சும், எதிரே வந்த லாரியும் கிருஷ்ணகிரி அடுத்த மேலுமலை என்ற பகுதியில் இன்று மதியம், நேருக்கு நேர் மோதியுள்ளது. அதன்பிறகு, பஸ்சின் பின்னால் வேகமாக வந்து கொண்டிருந்த கார் மீதும் லாரி மோதியுள்ளது.
இந்த சங்கிலி தொடர் விபத்தில் சிக்கி, 28 பேர் படுகாயமடைந்துள்ளனர். 17 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரில் 7 பேர் பெண்களாகும். அவர்களது பெயர் உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்ள போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
படுகாயமடைந்தோர், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தருமபுரி, பெங்களூரிலுள்ள மருத்துவமனைகளுக்கும் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை, தீயணைப்பு துறை இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன், சேலம் சரக டி.ஐ.ஜி.நாகராஜன், கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டனர்.
உயிரிழந்தோர், காயமடைந்தோர் குறித்த தகவல்களை உறவினர்கள் அறிந்து கொள்வதற்காக 1299 என்ற கட்டணமில்லா உதவி எண்ணை அரசு அறிவித்துள்ளது. காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்தார்.