தமிழக சாரண, சாரணியர் இயக்கத் தலைவர் தேர்தலில் 52 வாக்குகளை மட்டுமே பெற்ற எச்.ராஜா படுதோல்வி
தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்க தேர்தலில் எச்.ராஜா தோல்வி அடைந்தார். எதிர்த்து போட்டியிட்ட மணி வெற்றியடைந்தரா்.
சென்னை: தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எச்.ராஜா தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் கல்வி இயக்குநர் மணி வெற்றி பெற்றார்.
சென்னை காமராஜர் சாலையில் உள்ள தேசிய சாரண, சாரணியர் இயக்கத்தின் தலைமையகத்தில் அந்த இயக்கத்தின் தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவும், பள்ளிக்கல்வி முன்னாள் இயக்குநர் பி.மணியும் போட்டியிட்டனர்.
வாக்காளர் பட்டியலில் குளறுபடி
வாக்குபதிவு நடைபெற தொடங்கிய போதே, வாக்காளர்கள் பட்டியலில் குளறுபடி உள்ளதால் தேர்தலை நடத்த வேண்டாம் என்று டெல்லியில் இருந்து வந்ததாக கூறி ஒரு கடிதத்தை தேர்தல் பொறுப்பாளரிடம் ராஜா ஆதரவாளர்கள் அளித்தனர். ஆனால் அதுபோன்ற கடிதம் எதுவும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று தேர்தல் பொறுப்பாளர்கள் தெரிவித்துவிட்டனர்.
வாக்கு எண்ணிக்கையை நிறுத்த...
இதையடுத்து வாக்குப்பதிவு 2 மணிக்கு முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அப்போதும் ராஜா தரப்பினர் மற்றொரு கடிதத்தை கொடுத்து வாக்கு எண்ணிக்கையை நிறுத்துமாறு கூறினர். இதனால் தேர்தல் பொறுப்பாளர் சங்கரன் பாதியிலேயே சென்றுவிட்டார்.
232 வாக்குகள் பெற்றார் மணி
இதைத் தொடர்ந்து நடந்த வாக்கு எண்ணிக்கையில் பள்ளிக் கல்வியின் முன்னாள் இயக்குநர் பி.மணி வெற்றி பெற்றுவிட்டார். எதிர்த்து போட்டியிட்ட ராஜாவோ தோல்வியை தழுவினார். மொத்தம் 286 பேர் வாக்களித்தனர். அதில் 232 வாக்குகளை பெற்று மணி வெற்றி பெற்ற நிலையில், வெறும் 52 வாக்குகளை எச்.ராஜா பெற்று தோல்வியடைந்தார். 2 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
எச்.ராஜா தோல்வி
பள்ளி கல்விக்கான தேர்தலில் அரசியல் கட்சி தலைவர்கள் போட்டியிடக் கூடாது என்று அந்த இயக்கத்தின் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் ஒரு சில அழுத்தம் காரணமாக பாஜகவின் எச்.ராஜா போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியை தழுவினார்.
இதனிடையே சாரண, சாரணியர் இயக்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மணிக்கு, திமுக செயல் தலைவர் முக ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டுள்ளார். மணி அளித்த பேட்டியில், சாரணர் இயக்கத்தை மாநிலம் முழுவதும் அறியச் செய்தமைக்காக ராஜாவுக்கு நன்றி என தெரிவித்தார்.