எச். ராஜா போன்றவர்களை தள்ளி வைப்பதுதான்.. பாஜகவுக்கு நல்லது!
நீதிமன்றத்தை எச்.ராஜா அவமரியாதையாக பேசியிருக்கிறார்.
சென்னை: கடந்த காலங்களில் திராவிட இயக்க தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு பல இருந்தாலும் பரஸ்மர மரியாதையும் நட்புணர்வும் நீடித்தே வந்திருக்கிறது. இதனால் தமிழக அரசியல் ஒரு கண்ணிய பாதையிலேயே பயணித்து வந்தது என்றே சொல்லலாம்.
இத்தகைய அரசியல் நாகரீகம்தான் இரண்டு திராவிட கட்சிகளின் வெற்றிக்கு முக்கியமான அஸ்திரமாக இருந்தது. இதனால்தான் இவர்களது அறிக்கைகள் கூட வெகுஜன மக்களை எளிதாக சென்றடைந்து சிந்திக்கவும் வைக்க செய்தது.
ஆனால், திடீர் பாஜக தலைவர்களின் (பழைய பாஜக தலைவர்களில் பெரும்பாலானவர்கள் ஓரளவு நாகரீகமாக பேசக் கூடியவர்கள்) பேச்சுக்கள் வரம்பு மீறி சென்று கொண்டிருக்கின்றன. அதில் எப்போதுமே முதன்மையானவர் எச்.ராஜாதான். வாயைத் திறந்தாலே விஷமப் பேச்சாகத்தான் வெளி வருகிறது.

சிந்தாந்த வெளிப்பாடா?
எச்.ராஜா நீதிமன்றத்தை அவமரியாதையாக பேசியது மன்னிக்க முடியாததும், ஏற்றுக் கொள்ள முடியாததுமான வார்த்தை. ஆயிரம் இருந்தாலும் நீதிமன்றத்தை மட்டகரமான முறையில் தாக்குவதோ, அநாகரீகமாக பேசுவதோ குற்றமே. ஆரம்பத்திலிருந்தே எச்.ராஜா பேசுவதையெல்லாம் கட்சி தலைமை வேடிக்கை பார்க்காமல் கண்டித்திருந்தால் இன்று இந்த தடித்த திமிர் வார்த்தை அவரிடமிருந்து வெளிப்பட்டிருக்குமா? எப்போதுமே எச்.ராஜா பேசும் பேச்சாகட்டும், போடும் ட்வீட் ஆகட்டும் ஒட்டு மொத்தமாக ஆர்.எஸ். எஸ் மற்றும் பி.ஜே.பி சித்தாந்தத்தின் வெளிப்பாடாகவே உள்ளது.
கைதேர்ந்தவர் ராஜா
தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு கருத்தினைச் சொல்லி வன்முறையைத் தூண்டி விடுவதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் ராஜா. ஆன்மீகத்துடனும், அறநெறியுடனும் வாழ்கிறோம் என்றும், தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் சொல்லிக்கொள்ளும் பாஜக தலைவரின் வார்த்தைகளா இவையெல்லாம் என்று யோசிக்க தோன்றுகிறது. இப்படி இருந்தால் எப்படி மலரும்..!

தமிழிசை கருத்து என்ன?
எச்.ராஜாவின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்து என்று பாஜக ஒதுங்கிக் கொண்டால் அதை மனசாட்சியுடையவர்கள் அதை மன்னிக்க மாட்டார்கள். இதுவரை எச்.ராஜா பேசிய எந்த அராஜக, மற்றும் அநாகரீக வார்த்தைகளுக்கும் நமது மாநில தலைவர் தமிழிசை பகிரங்க கண்டனத்தை தெரிவித்தது கிடையாது. நீதிமன்றத்தை இவ்வளவு கொச்சையாக பேசியிருப்பதில், தமிழிசை தன் தரப்பு வாதமாக என்ன சொல்கிறார் என்று இனி பார்ப்போம்.

குட்கா ஊழல்
மறுபக்கம் காவல்துறையை கடுமையாக சாடியுள்ளார். நாட்டு நடப்பை சுட்டிக் காட்டி கடுமையாக விமர்சித்துள்ளார். சிறைச்சாலையில் நடந்து வரும் ஊழல், குட்கா ஊழல், டிஜிபி மீதான புகார்களை தனது பேச்சில் காட்டமாக குறிப்பிட்டுள்ளார். சிறைச்சாலை என்பது குற்றவாளி தனது குற்றத்துக்காக மனம் வருந்தி, அழுது, திருந்தி ஒரு புது மனிதனாக வெளியே வரும் அறச்சாலையாகத்தானே கடந்த காலங்களில் இருந்து வந்தது. ஆனால் தற்போது புழல் சிறையில் 5 ஸ்டார் ஓட்டல் ரூமில் இருப்பது கைதி கலக்கலாக டிரஸ் போட்டுக்கொண்டு எடுத்த படங்கள் வைரலாகி வருகிறது.

சிறை என்ன சொர்க்கபுரியா
சிறை அதிகாரிகள், இவர்கள் தரும் பணத்துக்கு ஆசைப்பட்டு சலுகைகளையும் வழங்கி அதனை கண்டுக்காமல் விட்டுவிடும் போக்கால் வந்ததுதானே இதெல்லாம்? சிறைச்சாலைகள் சொர்க்கபுரியாக மாறிவிட காரணம் என்ன? எது காரணம்? தமிழக அரசுதானே? அந்த சுகவாசி கைதிகள் 5 பேரை வேறு சிறைக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுவது கைதிகளையா? அதுதான் தீர்வா? என்பது அரசுக்கு இன்னும் புரியாமலே உள்ளது. எனவே எச்.ராஜாவின் இந்த பேச்சில் உண்மை இருக்கவே செய்கிறது.

உண்மை இருக்கிறது
தமிழகத்தில் பதவியில் உள்ள ஒரு டிஜிபி வீட்டில் ரெய்டு நடந்தததாக வரலாறு இருக்கிறதா? ஆனால் இப்போது நடந்திருக்கிறதே... ஊழல் புகாரில் பெயர் அடிப்பட்டும், இது சம்பந்தமாக பரபரப்பான ரெய்டுகளை அதிகாரிகள் நடத்தியும் இதுவரை டிஜிபி மீது நடவடிக்கை ஏதாவது அரசு தரப்பில் எடுக்கப்பட்டிருக்கிறதா? இல்லையே... எனவே எச்.ராஜாவின் இந்த பேச்சில் உண்மை இருக்கவே செய்கிறது.

கருணாநிதி, ஜெ., இருந்தால்...
இதெல்லாம் கண்ணெதிரிலேயே தற்போது நடந்து வரும் செயல்கள்தான். இதையெல்லாம் தடுக்க வேண்டியவர்கள் தடுக்கத் தவறியதால்தான், நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் எடுக்கத் தவறியதால்தான் ராஜா போன்றவர்கள் எல்லாம் இதை பொது இடத்தில் நின்று கொண்டு கேவலமாக பேசும் அளவுக்குப் போய் விட்டது. ஜெயலலிதா, கருணாநிதி ஆட்சிக்காலங்களில் இதுபோல ஒரு சம்பவம் நடந்திருக்க முடியுமா.. கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

பாஜகவின் சவக்குழி
எது எப்படி இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவின் தரம் படு வேகமாக சரிந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறது. எச். ராஜா போன்றவர்களை தங்களது தமிழக அடையாளமாக பாஜக இனியும் கருதினால், மதித்தால் அது பாஜக தனக்குத் தானே வெட்டிக் கொள்ளும் குழிக்குச் சமம். இதை பாஜக தலைவர்கள் மறந்துவிடக்கூடாது.

நோட்டாவை முந்தணும்
எல்லை மீறி போய்க்கொண்டிருக்கும் தனிநபர் வார்த்தை தாக்குதல்களுக்கு கடிவாளம் போடப்பட்டே ஆக வேண்டும். இதுபோன்ற அரசியல்வாதிகளை வளர்க்காமல் தூக்கித் தூரப் போட்டு விட்டு நாகரீகமான தலைவர்களை பாஜகவின் முகமாக மாற்ற முன்வந்தால்தான் பாஜகவுக்கு நோட்டாவைத் தாண்டி வரவாவது வாய்ப்பு கிடைக்கும்.












Click it and Unblock the Notifications