நான் லஞ்சம் தரேன், வெட்கமா இல்லை.. போலீசை மிரட்டிய எச்.ராஜா.. கெஞ்சிய போலீஸ்! - வீடியோ
நீதிமன்றங்களை மோசமான வார்த்தைகளில் எச்.ராஜா திட்டும் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.
சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் எச்.ராஜா போலீசை திட்டும் வீடியோ வைரலாகி உள்ளது. இதில் போலீஸ் அவரிடம் தொடர்ந்து கெஞ்சுவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலவரம் ஏற்பட கூடாது என்று பெரிய பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் மேடை அமைக்க பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அங்கு கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தார். போலீசையும், நீதிமன்றத்தையும் கொச்சையான வார்த்தைகளில் திட்டினார். இது வீடியோவாக வெளியாகி உள்ளது.
பேசியது என்ன
எச்.ராஜா அந்த வீடியோவில் பேசியதாவது, போலீஸ் மொத்தமும் கரப்ட் (ஊழல்). போலீஸோட ஈரல் 100 சதவிகிதம் அழுகி போச்சு. நான் இங்க இருக்குற இந்து வீடு வழியா போறேன். முடிஞ்சா தடுத்து பாரு. ஹைகோர்ட்டாவது.. $%^#$ (கெட்டவார்த்தை). இன்னைக்கு புழல் சிறையில யாரை கைது பண்ணி இருக்காங்க சொல்லுங்க. நீ இந்துவை டார்ச்சர் பண்ணுற. நீ இந்துவா?
போலீஸ் ஊழல்
போலீஸ் மொத்தமாக ஊழல் செஞ்சு இருக்கு. உங்களுக்கு வெட்கமா இல்லை. டிஜிபி வீட்டுல ரெய்டு நடக்குது. இந்துக்கள் என்ன அனாதையா, இந்த நாட்டுல. கிறிஸ்துவர், முஸ்லிம்கள் கிட்ட லஞ்சம் வாங்குறீங்களே நான் தரேன் லஞ்சம். வாங்குங்க. நான் ஸ்டேஜ் போடுவதை தடுக்க நீ யார். நான் போட்டுதான் பேசுவேன்.
போலீசுக்கு வெட்கமா இல்லை
நான் இப்ப ஸ்டேஜ் போடுறேன், முடிஞ்சா தடுங்க, கிறிஸ்துவர், முஸ்லிம், பாதிரியார் கைகுலி நீங்கதான். போலீசுக்கு வெட்கமா இல்லை. பயங்கரவாதிக்கு துணை போறீங்க நீங்க. வெட்கமாக இல்லை, நான் கொடுக்குறேன் லஞ்சம். ஹைகோர்ட்டாவது #$%@#@$ (தகாத வார்த்தை), என்று மிகவும் மோசமாக அநாகரீகமாக பேசியுள்ளார்.
அமைதியோ அமைதி
ஆனால் இவர் பேச பேச போலீஸ் அவரிடம் சமாதானம் மட்டுமே செய்தது. எச்.ராஜா அங்கிருக்கும் மக்களை தூண்டிவிடும் விதமாக பேசியுள்ளார். ஆனால் போலீஸ் எதுவும் செய்யாமல் மிகவும் அமைதியாக அவர் பேசுவதை தலையாட்டி கேட்டுக்கொண்டு இருந்துள்ளது. அவரை எந்த வகையிலும் போலீஸ் தடுக்க முயலவில்லை.
ஏன் இப்படி?
நீங்க லஞ்சம் வாங்குகிறீர்கள் என்கிறார் , நான் லஞ்சம் தருகிறேன் என்கிறார். மதத்தின் பெயர்களை இழுக்கிறார், ஆனாலும் போலீஸ் அமைதியாக உள்ளது. அதோடு இல்லாமல் போலீஸார் எச்.ராஜாவிடம் கெஞ்சுகிறார்கள், கேவலமாக பேசும் ராஜாவை அமைதியாக்கப் பார்க்கிறார்கள். போலீசின் இந்த செயல் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.