கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை மாற்றிக்கொள்ள பிப்ரவரி 8-ந் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு !
சென்னை: கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை மாற்றிக்கொள்ள பிப்ரவரி 8-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது என்று மண்டல பாஸ்போர்ட் அதிகாரி கூறியுள்ளார்.
கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்களை கடந்த நவம்பர் 24-ஆம் தேதிக்கு முன்பாக மாற்றிக் கொள்ள வேண்டும். அதன் பின்பு அவை பயன்பாட்டில் இருக்காது' என்று சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்திருந்தது. இதையடுத்து 24-ஆம் தேதிக்குப் பிறகும், கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்களை வைத்திருப்போர், புதிதாக விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படலாம். மேலும், பயணத்தின்போது வேறு ஏதேனும் பிரச்சினையை எதிர்கொள்ளவும் நேரிடலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது பிப்ரவரி 8-ந் தேதி வரை கையால் எழுதப்பட்ட பாஸ்போர்ட்டுகளை, சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகங்களில் வழங்கிவிட்டு புதிய பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொள்வதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அவகாசம் அளித்து இருக்கிறது.
இது குறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி ஒருவர் கூறுகையில், பாஸ்போர்டை மாற்றிக் கொடுக்கும் பணிகளில், சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் துரிதமாக இறங்கி உள்ளது. அத்துடன் வெளிநாடுகளுக்கு செல்பவர்களின் பாஸ்போர்ட்டுகள் புதுப்பிக்கும் காலம் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்குள் மேல் இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
அதேபோல் புதுப்பிக்கும் காலம் 20 ஆண்டுகள் இருக்கும் பாஸ்போர்ட்டுகளை, மாற்றி 10 ஆண்டுகள் புதுப்பிக்கும் வகையிலான பாஸ்போர்ட்டுகளாக பெற்றுக்கொள்ளலாம். அதேபோல் அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் தாங்கள் வைத்திருக்கும் சாதாரண வகை பாஸ்போர்ட்டுகளை, பாஸ்போர்ட் அலுவலகங்களில் வழங்கிவிட்டு 64 பக்கங்கள் கொண்ட ‘ஜம்போ' பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.
வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு செல்வது மற்றும் அவசரமான வேலைகளுக்கு செல்வதாக இருந்தால் மட்டுமே ‘தட்கல்' முறையில் பாஸ்போர்ட் கேட்டு, பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற நேரங்களில் தட்கல் மூலம் விண்ணப்பித்து பாஸ்போர்ட்களை பெறுவதை தவிர்க்கவேண்டும்.என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.என்று தெரிவித்துள்ளார்.