மீனவர் பிரச்சனை: புறா காலில் கட்டியா கடிதம் அனுப்பினீங்க? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கிளை குட்டு
சென்னை: செளதியில் கொத்தடிமைகளாகத் தத்தளிக்கும் மீனவர்களை மீட்கக் கோரும் வழக்கில் தமிழக அரசை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை கடுமையாக சாடியுள்ளது.
ராமநாதபுரம், குமரி, நாகை, தஞ்சை மாவட்டங்களைச் சேர்ந்த 62 மீனவர்கள் மீன்பிடித் தொழிலுக்காக செளதி அரேபியா சென்று கொத்தடிமைகளாக உள்ளனர். இவர்களை மீட்டுவர மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி மீனவரின் உறவினர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது தமிழக அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே நேற்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
அப்போது செளதி அரேபியாவின் சட்ட விதிமுறைகள் சிக்கலாக உள்ளதால் கால அவகாசம் தேவைப்படுவதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை ஏற்ற நீதிபதிகள் ஒருவாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் மீன்வளத்துறை சார்பில் ஆஜரான ராமநாதபுர மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர், தான் இதுகுறித்து சென்னையில் உள்ள மீன்வளத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருப்பதாக கூறினார். இதில் அதிருப்தி அடைந்த நீதிபதி, 6 மாதங்களாக மீனவர்கள் துன்பப்படும் நிலையில் புறாவின் காலில் கடிதம் கட்டி அனுப்பியிருக்கிறீர்களா? மீனவர்களை மீட்க வேறு வழிகளே இல்லையா என்று கேள்வி எழுப்பினர்.
பின்னர் மத்திய அரசு வழக்கறிஞரிடம் மீனவர்களை மீட்பது தொடர்பாக தமிழக அரசிடமிருந்து அழுத்தம் வந்ததா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர், இந்த நீதிமன்றத்தை தவிர வேறு எங்கிருந்தும் தங்களுக்கு அழுத்தம் வரவில்லை என்றார்.
இதையடுத்து தமிழக அரசிடம் உரிய விளக்கம் பெற்று செப்டம்பர் 15-ந் தேதிக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று தமிழக அரசு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.