விழுப்புரம் சிறுமி மீது பலாத்கார முயற்சி: குற்றவாளிக்கு 5 வருடமாக சிறை தண்டனை குறைப்பு
சென்னை: பாலியல் பலாத்காரம் செய்யும்போது தனது ஆணுறுப்பு சம்பந்தப்பட்ட பெண்ணின் பெண்ணுறுப்புக்குள் போகாததால் அதை பலாத்காரமாக கருத முடியாது என்று ஒரு பாலியல் பலாத்கார குற்றவாளி சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதத்தை கோர்ட் நிராகரித்து விட்டது.
இந்த வழக்கில் குற்றவாளியின் ஆணுறுப்பிலிருந்து விந்தனு வெளியானது நிரூபிக்கப்பட்டிருப்பதால் அவரது குற்றச் செயலும் தானாகவே நிரூபணமாகிறது என்று கூறிய சென்னை உயர்நீதிமன்றம் அந்த நபருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தும் உத்தரவிட்டது.
இதுதொடர்பான தீர்ப்பை நீதிபதி அருணா ஜெகதீசன் பிறப்பித்தார். முந்தைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்றை மேற்கோள் காட்டி அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்தார். நீதிபதி கூறுகையில் குற்றம் சாட்டப்பட்டவரின் உறுப்பு பெண்ணுறுப்புக்குள் போனால்தான் குற்றம் என்று சொல்ல முடியாது. மாறாக பலாத்கார முயற்சியின்போது விந்தணு வெளியானாலும் கூட அது குற்றச் செயல்தான்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் பலாத்காரச் செயலை முழுமையாக செய்ய முடியவில்லை என்று தெரிய வருகிறது. அவரால் உறுப்பைத்தான் செலுத்த முடியவில்லை. ஆனால் அந்த முயற்சியின்போது அவர் விந்தணுவை வெளியிட்டுள்ளார். எனவே அவர் குற்றம் செய்தது நிரூபணமாகியுள்ளது.
இதன் மூலம் அவர் செய்திருப்பது பாலியல் பலாத்கார முயற்சி என்பதும் நிரூபணமாகிறது. எனவே சூழ்நிலையின் சாதகத்தைக் கருத்தில் கொண்டு, இந்த நபர் குற்றம் செய்திருப்பது உறுதியாகிறது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
இந்த பாலியல் பலாத்கார சம்பவம் விழுப்புரத்தில் கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி நடந்தது. குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரு 10 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்துக் கைதானார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸார் 3 நாட்களுக்குப் பிறகே வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் செஷன்ஸ் கோர்ட் 2010 அக்டோபர் 6ம் தேதி சம்பந்தப்பட்ட நபருக்கு 10 ஆணடு சிறைத் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து குற்றவாளி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதை விசாரித்த கோர்ட் அப்பீலை நிராகரித்து குற்றவாளியின் தண்டனையை 5 ஆண்டாக மாற்றி, ரூ. 25,000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டது. இந்தப் பணத்தை பாதிக்கப்பட்ட சிறுமியின் பெயரில் வங்கியில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி அருணா ஜெகதீசன் தனது உத்தரவில் கூறியுள்ளார்.