வழக்கறிஞருடன் திருமணம்.. ஆயுள் கைதி சோமு மாமாவுக்கு 10 நாள் பரோல்!
இவர்களது திருமணம் நாளை சென்னை வியாசர்பாடியில் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக வழக்கறிஞர் அருணா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில்,
என்னுடைய மாமா சோமசுந்தரம் என்ற சோமு, ஒரு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனக்கும், அவருக்கும் பிப்ரவரி 2ஆம் தேதி வியாசர்பாடியில் உள்ள கோயிலில் வைத்து திருமணம் நடைபெற உள்ளது.
இதற்காக ஒரு மாதம் விடுமுறை கேட்டு சிறை கண்காணிப்பாளரிடம் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவை பரிசீலித்த கண்காணிப்பாளர், திருமணம் நடைபெறும் பிப்ரவரி 2ஆம் தேதி மட்டும், அதாவது ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்கியுள்ளார்.
திருமணத்துக்கு ஒரு நாள் விடுமுறை போதாவது. எனவே, ஒரு மாதம் விடுமுறை வழங்க கண்காணிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.ராஜேஷ்வரன், பி.என்.பிரகாஷ் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ஆயுள் தண்டனை கைதி சோமசுந்தரம் சிறையில் ஒழுக்கமாக உள்ளதாகவும், அவர் தன்னுடைய நேரத்தை கல்வி கற்பதில் செலவு செய்வதாகவும், யோக, தியானம் உள்ளிட்ட வகுப்பிலும் தவறாமல் கலந்து கொள்வதாகவும், 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அவர் மீது எந்த ஒரு புகாரும் வரவில்லை என்றும் கண்காணிப்பாளர் சான்றிதழ் அளித்துள்ளார்.
அப்படிப்பட்ட கைதியின் திருமணத்துக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை வழங்குவது போதாவது என்று நாங்கள் முடிவு செய்கிறோம். எனவே, சோமசுந்தரத்துக்கு 10 நாட்கள் விடுமுறை வழங்குகிறோம்.
அதாவது, பிப்ரவரி 1ஆம் தேதி மாலை 4 மணி முதல் 10ஆம் தேதி மாலை 4 மணி வரை அவருக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. இதுகுறித்து புழல் சிறை கண்காணிப்பாளர் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். 10 நாட்கள் விடுமுறையில் இருக்கும் சோமசுந்தரத்துக்கு தகுந்த பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.