பெட்ரோ கெமிக்கல் மண்டலங்களுக்கு அனுமதி.. மத்திய, மாநில அரசுகளுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்!
நாகை மாவட்டத்தில் 45 பெட்ரோ கெமிக்கல் மையங்களை அமைப்பதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த பெட்ரோ கெமிக்கல் மண்டலங்கள் குறித்து முறையாக கருத்துகளை மக்களிடம் கேட்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து தெளிவாக கிராம மக்களிடம் விளக்கப்படவில்லை. அறிவிப்பாணை ஆங்கிலத்தில் உள்ள நிலையில் அதனை ஒரு சில கிராம மக்களிடம் மட்டுமே காட்டியுள்ளது அரசு. எனவே அரசின் முடிவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகக் கூறி பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில் ஏற்கனவே வறட்சியில் சிக்கித் தவிக்கிறது காவேரி டெல்டா மாவட்டங்கள், இந்நிலையில் பெட்ரோ கெமிக்கல் மண்டலங்கள் தேவையா என்று கிராம மக்களின் கருத்தை கேட்க வேண்டும். இதிலுள்ள சாதக பாதகங்கள் குறித்து மக்களிடம் கலந்து ஆலோசிக்க வில்லை என்று மனுதாரர் குற்றம்சாட்டியிருந்தார்.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எந்த அடிப்படையில் 45 பெட்ரோ கெமிக்கல் மண்டலங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். அந்தப் பகுதி மக்களிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டதா என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு பதிலளிக்க தயாராக இருப்பதாக கூறியது ஆனால் எந்தக் கருத்தையும் கூறவில்லை. மாநில அரசு தரப்பு வழக்கறிஞர் வழக்கில் விளக்கமளிக்க அவகாசம் கோரியது, இதனையடுத்து 2 வார காலத்தில் பெட்ரோ கெமிக்கல் மண்டலங்களுக்கு அனுமதி அளித்தது குறித்து விளக்கமளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது.