ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை கட்டாயமாக்காதது ஏன்: ஹைகோர்ட் சரமாரி கேள்வி
ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை கட்டாயமாக்காதது ஏன் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: ஆசிரியர்களின் குழந்தைகளை ஏன் அரசு பள்ளிகளில் சேர்ப்பதில்லை. அதனை ஏன் அரசு கட்டாயமாக்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சை பந்தநல்லூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆங்கிலவழி வகுப்பிற்கு அனுமதி கோரி பள்ளி நிர்வாகம் தமிழக அரசிடம் மனு செய்திருந்தது.
அதற்கு தமிழக அரசு அனுமதி தரவில்லை. இதனை எதிர்த்து பந்தநல்லூர் கல்வி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு செய்தது.

சரமாரிக் கேள்வி
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி கிருபாகரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி கிருபாகரன் சரமாரிக் கேள்விகளை தமிழக அரசிடம் எழுப்பினார்.

பயிற்சி பெற்ற ஆசிரியர்களா?
மேலும், ஆங்கில வழிக் கல்வி எனில் தமிழில் வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களே ஆங்கில வகுப்பிற்கும் பாடம் எடுப்பார்களா? பயிற்சி பெற்ற ஆசிரியர் ஆங்கில வழி வகுப்புகளை நடத்துகிறார்களா?

ஆங்கில வழியில் எத்தனை மாணவர்கள்?
2012ம் ஆண்டு வெளியிட்ட அரசாரணைப்படி எத்தனை ஆங்கில வழிக் கல்வித் தொடங்கப்பட்டுள்ளன? 2012ம் ஆண்டு முதல் எத்தனை மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியில் படிக்கின்றனர்?

கட்டாயமாக்காதது ஏன்?
அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை கட்டாயமாக்காதது ஏன்? குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா?

செல்போனுக்கு தடை போடலாமா?
ஆசிரியர்கள் சங்கம் தொடங்குவதை ஏன் தடை செய்யக் கூடாது? பள்ளியில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவதை ஏன் தடை செய்யக் கூடாது? ஆசிரியர்களின் வருகையை சிசிடிவி கொண்டு கண்காணிக்காதது ஏன்?

மாணவர்களை யாரால் காப்பாற்ற முடியும்?
பள்ளி ஆசிரியர்கள் தங்களது கடமைகளை முறையாக செய்யாவிட்டால் மாணவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது. அரசு பள்ளி ஆசிரியர் சிலர் பகுதி நேர வேலை செய்வது வேதனை அளிக்கிறது. கிராம, மலைப்பகுதியில் உள்ள ஆசிரியர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்று நீதிபதி கிருபாகரன் பல கேள்விகளை எழுப்பினார்.

2 வாரங்களில் பதில்
நீதிமன்றம் எழுப்பிய அனைத்துக் கேள்விகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை வரும் ஜூலை 14ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications