ஆட்டோ மீட்டரை திருத்த அவகாசம் கோரிய மனு தள்ளுபடி!
சென்னை: ஆட்டோ மீட்டரை திருத்தி அமைக்க கால அவகாசம் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் திருத்தப்பட்ட ஆட்டோ கட்டணம் அமலுக்கு வந்தது.
ஆனால், புதிய மீட்டர் பொருத்த அவகாசம் வேண்டும் என்று ஆட்டோ உரிமையாளர்கள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து தமிழக அரசும் அவகாசம் அளித்தது.
புதிய மீட்டர் திருத்தம்
சென்னையில், 71,440 ஆட்டோக்கள் ஓடுகின்றன. ஆனால், 44,369 ஆட்டோக்களில் மட்டுமே புதிய மீட்டர் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 65,084 ஆட்டோ உரிமையாளர்கள் புதிய கட்டண அட்டையை வாங்கியுள்ளனர்.
27000 ஆட்டோக்கள்
இரண்டு முறை தமிழக அரசு அவகாசம் அளித்தது. இந்த அவகாசம் கடந்த 15ஆம் தேதி முடிவடைகிறது. ஆனாலும் இன்னமும் 27,071 ஆட்டோக்களில் இன்றுவரை புதிய மீட்டர் திருத்தம் செய்யப்படவில்லை.
கால அவகாசம்
இந்நிலையில், மீட்டர் திருத்தியமைக்க கால அவகாசம் அளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்டோ தொழிலாளர் சங்கம் வழக்கு தொடர்ந்தது. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆட்டோ மீட்டரை திருத்துவதற்கு ஒருமாத கால அவகாசம் வழங்கப்பட்டது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றம் தள்ளுபடி
இதையடுத்து, அரசு கால அவகாசம் வழங்கியதால் மேலும் அவகாசம் வழங்க முடியாது என்று கூறிய நீதிபதிகள், ஆட்டோ தொழிலாளர் சங்க மனுவை தள்ளுபடி செய்தனர்.
80 ஆட்டோக்கள் பறிமுதல்
ஆட்டோக்களை ஆய்வு செய்வதற்காக 25 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் பல குழுக்களாக பிரிந்து சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் போக்குவரத்து காவல்துறையினர் நேற்று நடத்திய அதிரடி சோதனையில் 80 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.