தமிழகம் முழுவதும் தீவிர பாதுகாப்பு - அப்பல்லோ மருத்துவமனையில் உச்சக்கட்ட பாதுகாப்பு
முதல்வர் ஜெயலலிதாவிற்கு அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால் தமிழகம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உச்சக்கட்ட போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் 75வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
அதிமுக தொண்டர்களிடையே ஒருவித பதற்றமும், பரபரப்பும் தொற்றிக்கொண்டுள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் சென்னையை நோக்கி திரண்டு வந்து கொண்டுள்ளனர்.
போலீஸ் குவிப்பு
தமிழகம் முழுவதும் அசாதாரணமாக சூழ்நிலை நிலவுவதால் சென்னை மற்றும் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பதற்றமான இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
டிஜிபி உத்தரவு
தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலத்தப்படுத்த அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும் டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டார். அதன்பேரில் அந்தந்த கண்காணிப்பாளர்கள் மாவட்டம் முழுவதும் போலீஸ் படைகளை குவித்தனர். ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பெட்ரோல் நிலையங்கள், மருத்துவமனைகள், பேருந்து பணிமனைகள் என அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு திரும்ப உத்தரவு
தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை சமாளிக்க விடுப்பில் சென்ற சிபிசிஐடி, மத்திய குற்றப்பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவு போலீசாரையும் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் என்று டிஜிபி அதிரடியாக உத்தரவிட்டனர். இந்த பாதுகாப்பு பணியில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் ஏற்படாத வண்ணம் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போலீசார் செய்துள்ளனர். இரவோடு இரவாக பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டது.
அப்பல்லோ முன் போலீஸ் குவிப்பு
சென்னையில் அனைத்து இடங்களும் பதற்றமான பகுதியாக கருதப்படுகிறது. இதனால் நகரம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆங்காங்கே துப்பாக்கி ஏந்திய போலீசாரும் ரோந்து சென்று கண்காணித்தனர். ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் அப்பல்லோ மருத்துவமனை வளாகம் முன்பு அதிமுக தொண்டர்கள் குவிந்து வருவதால் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
போக்குவரத்து நிறுத்தம்
அப்பல்லோ மருத்துவமனை முன்பு தொண்டர்கள் கட்டுக்கடங்காமல் குவிந்து வருவதால், கிரீம்ஸ் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. நேரம் செல்லச்செல்ல பதற்றமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டுள்ளது. தொண்டர்களின் அழுகையும், பிரார்த்தனையும் அதிகரித்து வருகிறது.
ஆர். கே. நகர் தொகுதியில் பாதுகாப்பு
முதல்வர் ஜெயலலிதா தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதி முழுவதும் பதற்றம் நிலவுவதால் அந்த பகுதிகளில் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மேலும், இந்த பணியில் அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தயார் நிலையில் அதிரடிப்படை
மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் 9 கம்பெனிகளை சேர்ந்த அதிரடிப்படை போலீசார் தயார் நிலையில் உள்ளனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு அவர்கள் உடனடியாக விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சிஆர்பிஎப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உள்துறை செயலர் திரும்பினார்
டெல்லி சென்றிருந்த உள்துறை செயலர் அபூர்வா வர்மா உடனடியாக சென்னை திரும்பியுள்ளார். அவர் உடனடியாக உயரதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தயார் நிலை
சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் கோயம்பேடு பேருந்து நிலையம், காய்கறி சந்தை, சென்ட்ரல், எழுப்பூர் ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுதவிர துணை கமிஷனர்கள் தலைமையிலும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டது. பதற்றமான இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ்களும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் நலமடைய வேண்டி தமிழகம் முழுவதும் தொண்டர்கள் தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.