மழையை எதிர் கொள்ள தயார் நிலையில் சென்னை மாநகராட்சி.. உதவி எண் அறிவிப்பு
நாடா புயலால் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் அதனை எதிர் கொள்ள சென்னை மாநகராட்சி உதவி எண்களை அறிவித்துள்ளது.
சென்னை: நாடா புயல் உருவாகியுள்ளதால் சென்னையில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், அவசர உதவிக்கான எண்களை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இதே நேரத்தில் கனமழை பெய்தது. அப்போது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததால் கடுமையான பாதிப்பிற்கு சென்னைவாசிகள் ஆளானார்கள். இந்நிலையில், நாடா புயல் வருகிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனை சமாளிக்க தமிழக அரசு 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி மழையை எதிர் கொள்ள அவசர உதவி எண்களை அறிவித்துள்ளது.
அதன் படி, மழைநீர் தொடர்பாக பாதிப்புகள் இருந்தால் '1077', '1913'என்ற எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். இதற்காக சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு பிரிவு 24 மணி நேரமும் செயல்படும். மேலும், சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மரங்கள் விழுந்தாலோ, சாலை விபத்துக்கள் நடந்தாலோ உடனடியாக இந்த எண்களுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.