மேட்டுப்பாளையத்தில் சூறைக்காற்றுடன் சுருட்டி வீசிய மழை… வேரோடு சாய்ந்த மரங்கள்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் சுருட்டி வீசிய மழைக்கு சாலையோர மரங்கள் வேறோடு சாய்ந்தன. இதனால் போக்குவரத்து பலமணிநேரம் பாதிக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, கல்லாறு பகுதிகளில் நேற்று இரவு 7 மணிக்கு இடி, மின்னலுடன் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம்-ஊட்டி மெயின் ரோட்டில் கல்லாறு ரெயில்வே கேட்டில் இருந்து முதல் கொண்டை வளைவுக்கு இடையில் 3 இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு சரிந்து நடுரோட்டில் விழுந்தன. இதன் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தீயணைப்பு நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை மின்சார ரம்பம் உதவியுடன் துண்டு துண்டாக வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
விடிய விடிய அகற்றும் பணி
2 ராட்சத கிரேன்களும் வரவழைக்கப்பட்டன. தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணி வரை சீரமைப்பு பணி நடைபெற்றது. 3 மணிக்கு மேல் மரங்கள் ரோட்டில் இருந்து அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.
இருளில் மூழ்கிய நகரம்
இதேபோல் மேட்டுப்பாளையம் நகரில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தன. இதனால் மின்கம்பங்கள் இரண்டாக முறிந்து சாய்ந்தன. உடனடியாக மின்தடை ஏற்பட்டது. இரவு முழுவதும் மேட்டுப்பாளையம் நகரம் இருளில் முழ்கியது.
வாழை மரங்கள் சேதம்
சிறுமுகை பகுதியில் பெய்த மழை காரணமாக லிங்காபுரம், காந்தவயல் ஆகிய பகுதிகளிலும், மேட்டுப்பாளையத்தில் மோத்தேபாளையம், வீராசாமி நகர், துத்தாரி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து நாசமானது இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.
வீடுகள் சேதம்
மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் உள்ள உஸ்மான் நகர் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் சூறாவளி காற்றால் சேதமடைந்தன. சில வீடுகளின் ஓடுகள் காற்றில் பறந்தன. வீடுகளில் குடியிருந்த பொதுமக்கள் இரவு தூக்கமின்றி தவித்தனர். இதேபோல் அன்னூர் பகுதியிலும் பலத்த மழை காரணமாக சேதம் ஏற்பட்டது.
போக்குவரத்து பாதிப்பு
அன்னூரில் கோவை - சத்தி ரோட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பசூர் மற்றும் பொங்கலூர் பகுதியில் ரோட்டோரத்தில் நின்ற மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாழை மரங்கள் சேதம்
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள் 4 மணி நேரம் போராடி மரங்களை அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. கணுவக்கரை, கோவில்பாளையம், வடக்கலூர், ஆம்போதி பகுதியில் சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக 1000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் காற்றில் முறிந்து விழுந்தன.