தமிழகத்தில் கனமழையால் பலியானோர் எண்ணிக்கை 112 ஆக உயர்வு
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பலியானவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும், பிற மாவட்டங்களில் சில பகுதிகளில் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே பெய்த கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மிதக்கையில் மேலும் கனமழை பெய்யும் என்ற அறிவிப்பு மக்களுக்கு அச்சத்தை அளித்துள்ளது. கனமழையால் பல்வேறு பகுதிகளில் வீடுகள் இடிந்தும், மரங்கள் விழுந்தும் பலர் பலியாகியுள்ளனர்.
இது போன்ற சம்பவங்களில் சனிக்கிழமை மட்டும் 9 பேர் பலியாகியுள்ளனர். மாநிலத்தில் கனமழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளத்தில் மிதக்கும் கடலூர் மாவட்டத்தில் தான் அதிகாமானோர் பலியாகியுள்ளனர்.
திருச்சி அருகே உள்ள புத்தூர் மீன் சந்தையில் மின் கம்பி அறுந்து கிடந்தது. அதை அகற்ற முயற்சி செய்கையில் மின்சாரம் தாக்கி மீன் வியாபாரி பலியானார்.
கால்நடைகள்:
தரமணியில் உள்ள கலைஞர் நகரில் வசித்து வரும் வெங்கடேசன்(30) என்பவரின் பசுமாடு வெள்ளிக்கிழமை இரவு பிள்ளையார் கோவில் வழியாக சென்றுள்ளது. அங்கு பூமிக்கு அடியில் புதைக்கப்பட்டிருந்த கேபிளில் இருந்து மின் கசிந்துள்ளது. அதை மிதித்த பசுமாடு மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிர் இழந்தது. வெள்ளிக்கிழமை அதே இடத்தில் நாய் ஒன்று மின்சாரம் தாக்கி பலியானது.
பிள்ளையார் கோவில் பகுதியில் கடந்த 9ம் தேதி முதல் கேபிளில் இருந்து மின்கசிவதாகவும் இது குறித்து மின்வாரியத்திடம் புகார் அளித்தும் பலனில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.