ஈரோடு வனப்பகுதியில் ஜோர் மழை.. கோடையில் நிரம்பிய குண்டேரிப்பள்ளம் அணை!!
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்ட வனப்பகுதிகளில் பெய்துவரும் கன மழை காரணமாக கோடையிலும் குண்டேரிபள்ளம் அணை நிரம்பி பவானி ஆற்றில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனையடுத்து ஆற்றின் கரையோர பகுதிகளில் வாழும் மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் நம்பியூர், பவானி, உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த காற்றுடன் பெய்த கோடை மழையால் சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள வாழைகள் முறிந்து சேதமானது.
இந்த நிலையில் நேற்று ஈரோடு மாவட்ட வனப்பகுதியான கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம், அயில்நத்தம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு திடீரென கருமேகக் கூட்டங்கள் நான்கு புறமும் சூழ்ந்து வந்தன. மாலை நேரத்திலும் வானம் லேசான தூறல் போட்டபடி இருந்தது. இரவு 9 மணியளவில் பலத்த இடி-மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழையால் கடம்பூர், குன்றி மற்றும் மாக்கம்பாளையம் பகுதியில் உள்ள காட்டாறுகளில் செந்நிறத்தில் வெள்ளம் பாய்ந்து சென்றது. பல இடங்களில் திடீர் அருவிகள் ஏற்பட்டது.
இந்த வெள்ளநீர் காட்டாற்றில் கலந்து மலைப் பகுதியின் அடிவாரத்தில் உள்ள குண்டேரிபள்ளம் அணைக்கு கரைபுரண்டு ஓடி வந்தது. குண்டேரிபள்ளம் அணை 42 அடி கொள்ளளவு கொண்டது. ஏற்கனவே சமீபத்தில் பெய்த மழையால் அணை பாதிக்கு மேல் நிரம்பி இருந்தது.
விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று கடந்த சில தினங்களுக்கு முன்புதான் குண்டேரிபள்ளம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணை நீர்மட்டம் குறையும் நிலையும் காணப்பட்டது. ஆனால் விடிய...விடிய கொட்டிய மழையால் தற்போது குண்டேரிபள்ளம் அணை நிரம்பி வழிகிறது.
இன்று காலை 6 மணி அளவில் அணையிலிருந்து வினாடிக்கு 1400 கனஅடி தண்ணீர் வெளியேறிக்கொண்டிருந்தது. கடம்பூர், குன்றி வனப்பகுதியில் இன்று காலையும் பலத்த மழை பெய்தது. அணை நிரம்பி வெளியேறும் உபரிநீர் பவானி ஆற்றில் கலந்து வருகிறது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இதனையடுத்து அப்பகுதியில் வாழும் கரையோர பொதுமக்களுக்கு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர். அணையிலிருந்து உபரி நீராக வெளியேறி கொண்டிருக்கும் தண்ணீரில் யாரும் இறங்கி குளிக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.
அடித்துச்செல்லப்படும் மீன்கள்
குண்டேரிபள்ளம் அணையிலிருந்து தண்ணீர் நிரம்பி வெளியேறி வருவதால் அணையில் வளர்க்கப்படும் கட்லா, லோகு, மிருகாள், கெண்டை, ஜிலேபி என மெகா சைஸ் மீன்களும் வெளியேறி உபரி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. இப்படி உபரி நீரில் வெளியே செல்லும் மீன்களை அப்பகுதி மக்கள் போட்டி போட்டு கொண்டு பிடித்து வருகிறார்கள்.
விவசாயிகள் மகிழ்ச்சி
ஒரே நாளில் பெய்த கனமழையால் குண்டேரிபள்ளம் அணை நிரம்பி வழிவது அப்பகுதி மகக்ளையும் ஈரோடு மாவட்ட விவசாயிகளையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
திருவண்ணாமலையில் மழை
இதேபோல திருவண்ணாமலை, செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் அரை மணி நேரமாக மழை பெய்து வருகிறது. இடி, மின்னலுடன் மழை பெய்வதால் வெப்பம் தணிந்துள்ளதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.