விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.. ஆறாக ஓடும் வெள்ளநீர்..தத்தளிக்கும் ஓசூர்..தவிக்கும் மக்கள்
ஓசூர்: விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் ஓசூரில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் ஆறாக பெருக்கெடுத்துள்ளது. பால், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீடுகளுக்குள் தவிக்கும் மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அவ்வப்பொழுது கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதே போல நேற்று இரவு ஓசூர் மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் இரவு கடுமையான கனமழை வெளுத்து வாங்கியது. விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் ஆறு போல ஓடியது.
ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கே சி சி நகர் என்ஜிஓ காலனி உள்ளிட்ட தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது. ஒரு சில பகுதிகளில் அமைக்கப்பட்டு உள்ள சில தரைப்பாலத்தையும் மூழ்கடித்து சுமார் இரண்டு மூன்று அடி உயரம் மழை நீர் சாலையில் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி..வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. புயல் வருதாம் உஷார் மக்களே!
பெருக்கெடுத்த வெள்ளம்
அந்தப் பகுதியில் உள்ள ராஜ கால்வாய் முழுமையாக நிரம்பி வழிந்து அதிகப்படியான தண்ணீர் வெளியேறுவதால் குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் வெளியே வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் கார் உள்ளிட்ட வாகனங்களை மூழ்கடித்துக்கொண்டு வெள்ள நீர் செல்கிறது.
மாடிகளில் தஞ்சம்
பலருடைய வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் ஏராளமானோர் மாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர். பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பெற முடியாத நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் மேலும் மழைநீருடன் கழிவு நீரும் ஏராளமாக கலந்து ஓடுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அச்சமும் உள்ளது.
ராஜகால்வாய் உடைப்பு
ராஜ கால்வாய் உடைந்து இது போன்ற மழை நீர் அதிகப்படியாக வெளியேறி உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ராஜ கால்வாயில் கொள்ளளவையும் தாண்டி அதிகப்படியான நீர் வெளியேறுவதால் அங்கிருந்து ஏராளமான மழை நீர் வெளியேறுகிறது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் முழுமையாக மழை நீர் வடிந்த பிறகு உண்மை நிலை தெரிய வரும் என மாநகராட்சி நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.
பாதுகாப்பான இடங்களில் தஞ்சம்
இருப்பினும் இதுபோன்று கடுமையான கனமழை காலங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்து கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. வீடுகளுக்குள் சிக்கித்தவிக்கும் பலருக்கும் பால் பாக்கெட்டுகள்,குடிநீர் போன்றவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏராளமானோர் நாய் உள்ளிட்ட செல்லப்பிராணிகளுடன் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.