சென்னையில் இடியுடன் பெய்த கனமழை… மரம் முறிந்து விழுந்து ஒருவர் காயம்
சென்னை: சென்னையில் இரவு நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததில் மரம் முறிந்து விழுந்து ஒருவர் காயமடைந்தார். இதனால் ஒருமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தென்மேற்கு பருவமழையானது, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தீவிரமடைந்து வருவதன் காரணமாக ஒரு சில தினங்களாக தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்று பகலில் வெயில் மண்டையை பிளந்த நிலையில் இரவில் குளிர் காற்று வீசியது. திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலைகளில் தேங்கிய மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.
ஈக்காட்டுத்தாங்கல் பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், ஒருவருக்கு காயம் ஏற்பட்டதோடு, சுமார் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இந்த மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்புகள் இருந்தாலும், சென்னையின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெளியேறுவதற்கு எந்த வசதியும் இல்லாமல் உள்ளது. மடிப்பாக்கம், வளசரவாக்கம், தி.நகர் உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது, மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் கூட நிரந்தர தீர்வு இல்லை என்கின்றனர் பொதுமக்கள். எனவே தாழ்வான பகுதிகளில் தேங்கக் கூடிய மழை நீரானது விரைவில் வெளியேற கால்வாய்களில் நிலவும் அடைப்புகளை சீரமைக்க வேண்டும் என்பது சென்னை புறநகர் மக்களின் கோரிக்கை.












Click it and Unblock the Notifications