சேலம்: விடிய விடிய மின்னலுடன் மழை... நிலத்தை இடி தாக்கி பீறிட்டு கொட்டிய தண்ணீர்!
சேலம்: சேலம் மாவட்டத்தில் விடிய விடிய இடி மின்னலுடன் பெய்த மழையால் வெள்ளநீர் பெறுக்கெடுத்தது. கன மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் முழுவதும் நேற்று பகலில் வெயில் கொளுத்தியது. மாலை நேரம் ஆனதும் கருமேகங்கள் சூழ்ந்து மழை வருவது போல் இருந்தது.
சேலம் நகரில் ஒரு சில இடங்களில் சூறாவளி காற்று வீசியது. இதனால் பல இடங்களில் மழை வருவதற்கு முன்பே மின்சாரம் தடைப்பட்டது. தொடர்ந்து இரவு 7.30 மணி முதல் இடியுடன் கூடிய கனமழை கொட்ட தொடங்கியது. தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்தது.
சூழ்ந்த வெள்ளநீர்
தொடர்ந்து மீண்டும் இரவு 9 மணிக்கு மேல் பெய்ய தொடங்கிய மழை அதிகாலை வரை பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக நகரின் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நின்றது. மேலும் சாக்கடைகளும் மழை நீரில் நடுரோட்டுக்கு அடித்து வரப்பட்டு கிடக்கிறது.
சேறும் சகதியுமாக
பாதாளசாக்கடை மற்றும் தனி குடிநீர் திட்டம், மின்சார வாரியம், தனியார் கேபிள் நிறுவனத்தினர் நகரின் பல்வேறு இடங்களில் குழி தோண்டி இருப்பதால் அந்த பகுதிகளில் சேறும், சகதியுமாக காணப்பட்டது. அதோடு பல இடங்களில் சரியாக குழிகள் மூடப்படாததால் ஆங்காங்கே மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்பட்டது.
இடி சூறாவளிக்காற்று
வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த மழை கொட்டியது. அயோத்தியாப்பட்டணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. அவ்வப்போது பயங்கர இடி-மின்னலுடன் சூறாவளி காற்று வீசியது. இதன் காரணமாக பல இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்தும், மின்சார கம்பிகள் அறுந்தும் விழுந்தது.
ஆலங்கட்டி மழை
ஆத்தூர் மற்றும் தம்மம்பட்டி, கெங்கவல்லி, தலைவாசல் உள்ளிட்ட பகுதிகளிலும் இரவு 9 மணி முதல் பலத்த மழை கொட்டியது. ஆத்தூர் பகுதியில் அத்திக்கட்டி, ஆலங்கட்டி மழை கொட்டியது. இந்த மழையின் காரணமாக நகரில் பல இடங்களில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.
மின்வெட்டு
இதே போல் ஓமலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் இரவில் பலத்த மழை கொட்டியது. இரவு 9 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை சுமார் 2 மணி நேரம் மழை அதிகளவில் பெய்தது. இதன் காரணமாக ஓமலூர் பகுதியில் மின்சாரம் தடைப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு தான் மீண்டும் மின்சாரம் வந்தது.
நிரம்பிய குளங்கள்
சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு 9.30 மணிக்கு மேல் பயங்கர இடி-மின்னலுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதன் காரணமாக சங்ககிரி, ராமசாமிநகர், சத்யாநகர், ஊஞ்ச கோரை, பக்காளியூர், சங்ககிரி ஆர்.எஸ். ஆகிய பகுதிகளில் குளம், குட்டை ஆகியவை நிரம்பியது.
கடும் குளிரால் அவதி
ஏற்காடு பகுதியில் இரவில் சாரல் மழை மட்டுமே இருந்தது. பெரிய அளவில் மழை இல்லாவிட்டாலும் குளிர் அதிகளவில் இருந்தது. இன்று காலை குளிர்ந்த காற்று வீசி வருகிறது.
சேலம் மாவட்டம் முழுவதும் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக இரவில் கடுங்குளிர் நிலவியது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். மழையின் காரணமாக பல இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது.
இடி தாக்கி பீறிட்ட தண்ணீர்
பலத்த இடியுடன் பெய்த மழையினால் ஓமலூரை அடுத்த சின்னகாடம்பட்டி என்ற இடத்தில் மகேந்திரன், மாதேஸ், நடேசன் ஆகியோரின் தோட்டத்தில் நீர் இடி விழுந்தது. இதில் வறண்டு போன நிலத்தில் நிலத்தை பிளந்துகொண்டு 6 இடங்களில் பீரிட்டு தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது.
விவசாயிகள் மகிழ்ச்சி
நீர் இடி இறங்கி பீரிட்டு வரும் தண்ணீரை காண அந்த பகுதியில் பலர் கூட்டம் கூட்டமாக வந்து பார்த்து செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளன