திடீர் கனமழையால் விறுவிறுவென நிரம்பும் செம்பரம்பாக்கம் ஏரி.. சென்னை மக்கள் குஷி
இரவு பெய்த கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரி விறுவிறுவென உயர்ந்து வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப் போடு நீங்கும் என சென்னைவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னை: சென்னைவாசிகளுக்கு குடிக்க நீர் தரும் செம்பரம்பாக்கம் ஏரி கனமழை காரணமாக விறுவிறுவென நிரம்பி வருகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதரம் செம்பரம்பாக்கம் ஏரிதான். 140 ஆண்டுகளில் இல்லாத வறட்சி தமிழகத்தில் நிலவி வருவதால் செம்பரப்பாக்கம் ஏரி வறட்டு தட்டாந்தரையானது.
இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் மோட்டார் போட்டு நீர் உறிஞ்சி எடுக்கும் நிலை உருவானது. ஒரு கட்டத்தில் மோட்டார் போட்டும் தண்ணீர் உறிஞ்சி எடுக்க முடியாத அளவிற்கு நிலத்தடி நீரும் வற்றியது.

கடும் குடிநீர் பஞ்சம்
இதனால் சென்னை நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. சென்னைவாசிகளுக்கு அன்றாடம் வழங்கப்படும் நீர் பாதியாக குறைக்கப்பட்டு ஒரு நாள் இடைவெளியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

கனமழை
இந்நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் நேற்று இரவு பரவலாக கனமழை பெய்தது. குறிப்பாக ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்து மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மளமளவென உயர்ந்த நீர்மட்டம்
கனமழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து மளமளவென அதிகரித்தது. இதனையடுத்து 57 மில்லியன் கன அடியாக இருந்த செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு, ஒரே நாளில் 21 மில்லியன் கன அடி உயர்ந்து 78 மில்லியன் கன அடியாக உள்ளது.

மேலும் அதிகரிக்க வாய்ப்பு
அணைக்கு வினாடிக்கு 253 கன அடி என்ற அளவில் நீர் வரத்து உள்ளது. ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் தொழிற்பேட்டைக்கு வினாடிக்கு 5 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஏரியின் கொள்ளளவு மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திடீர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருவது சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications