மக்கள் விரும்பினாலும் ஓ.பி.எஸ். தனது ராஜினாமாவை திரும்பப் பெற முடியாது.. அது தெரியுமா உங்களுக்கு?
மக்களே விரும்பினாலும் கூட முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தால் தனது ராஜினாமாவை திரும்பப் பெற முடியாது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
சென்னை: தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவேன் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியிருந்தாலும் கூட அது சட்டப்படி சாத்தியமில்லை என்று தெரிய வந்துள்ளது.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், நான் மக்கள் விரும்பினால் எனது ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவேன் என்று கூறியிருந்தார். ஆனால் அது காலம் கடந்த முடிவு என்றுதான் சொல்ல வேண்டும். காரணம், சட்டப்படி அதற்கு சாத்தியம் இல்லை.
தமிழக மக்கள் விரும்பினால் என்று இல்லை, அவரே விரும்பினாலும் கூட அவரது ராஜினாமா முடிவைு திரும்பப் பெற முடியாது. அதில் சட்ட ரீதியாக சிக்கல் உள்ளது. காரணம், முதல்வரின் ராஜினாமாவை ஏற்கனவே ஆளுநர் ஏற்றுக் கொண்டு விட்டார், ஓ.பன்னீர் செல்வத்தை இடைக்கால முதல்வராக தொடருமாரும் உத்தரவு போட்டு விட்டார்.
முடிந்து போன விஷயம்
எனவே இந்த ராஜினாமா முடிவு என்பது முடிந்து போன விஷயம், சட்டத்தின் பார்வையில். அதைத் திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதே எதார்த்தமாகும்.
சில வாய்ப்புகள் உள்ளன
அதேசமயம், ஒரு சில வாய்ப்புகள் ஓ.பன்னீர் செல்வத்துக்கு சாதகமாக உள்ளன. அதாவது சட்டசபையில் உங்களது பெரும்பான்மையை நிரூபியுங்கள் என்று ஆளுநர் உத்தரவிடலாம். அதை ஏற்று முதல்வர் தனது பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபிக்க முயற்சி எடுக்கலாம்.
மீண்டும் தேர்ந்தெடுக்கலாம்
இன்னொரு வாய்ப்பு என்னவென்றால் சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி தன்னை மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கச் செய்வது. இந்த நேரத்தில் ஒரு உயர்நீதிமன்ற உத்தரவும் இடையில் வந்து நிற்கிறது. அதாவது ஏற்றுக் கொள்ளப்பட்ட ராஜினாமாவை திரும்பப் பெற முடியாது என்பதுதான் அது.
ஆளுநர் நினைத்தாலும் முடியாது
எனவே ஓ.பி.எஸ் தனது ராஜினாமாவை திரும்பப் பெற ஒரு வேளை ஆளுநர் அனுமதித்தால், அதை எதிர்த்து சசிகலா தரப்பு கோர்ட்டுக்குப் போனால், ஓ.பி.எஸ்ஸுக்குப் பாதகமாக தீர்ப்பு வர வாய்ப்புள்ளது. இந்த கோர்ட் தீர்ப்பு அரசியல் ரீதியான ராஜினாமா குறித்துப் பேசவில்லை என்றாலும் கூட ஒருவர் ராஜினாமா செய்த பின்னர் அது ஏற்றுக் கொண்ட பின்னர் அதைத் திரும்பப் பெற அவருக்கு உரிமை இல்லை என்று தெளிவாக உள்ளது.
சாத்தியமில்லாதது
மொத்தத்தில் தமிழக மக்கள் விரும்பினாலோ அல்லது ஓ.பி.எஸ்ஸே விரும்பினாலோ கூட அவரது ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவது என்பது சாத்தியமில்லாத விஷயம் என்கிறார்கள் சட்ட வல்லுநர்கள்.