முத்துராமலிங்கம் படத்தை திரையிட திடீர் தடை: சென்னை ஹைகோர்ட் உத்தரவு
முத்துராமலிங்கம் திரைப்படத்தை திரையிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: முத்துராமலிங்கம் திரைப்படத்தை திரையிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாங்கிய கடனை திருப்பி தரவில்லை என உயர்நீதிமன்றத்தில் எம்.வி.பிரகாஷ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் டி.விஜய் பிரகாஷ் தயாரித்துள்ள படம் முத்துராமலிங்கம். ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் கவுதம் கார்த்திக், நெப்போலியன் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
இப்படத்தில், 'தெற்கு தேச சிங்கமடா, முத்துராமலிங்கமடா, சுத்த பசும் பொன் தங்கமடா' என்ற பாடலை பஞ்சு அருணாச்சலம் எழுதியுள்ளார். இப்பாடலினை கமல் பாடியுள்ளார். இதையடுத்து முத்துராமலிங்கம் திரைப்படம் பிப்ரவரி 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது.
இந்த நிலையில் முத்துராமலிங்கம் திரைப்படத்தை திரையிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. எம்.வி.பிரகாஷிடம் தயாரிப்பாளர் விஜய் பிரகாஷ் ரூ.29 லட்சம் கடன் பெற்றிருந்தார். வாங்கிய கடனை திருப்பி தரவில்லை எனக் கூறி உயர்நீதிமன்றத்தில் எம்.வி.பிரகாஷ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தை திரையிட தடைவிதித்துள்ளது.