லிங்கா பட ரிலீஸ் நிபந்தனை தளர்வு.. நாளை ரூ. 3 கோடி - மீதம் 7 கோடியை திங்களன்று கட்ட வேண்டும்!
மதுரை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள லிங்கா படத்தை ரூ. 10 கோடி உத்தரவாதத்துடன் நாளை ரிலீஸ் செய்யலாம் என்ற உத்தரவை தளர்த்தியுள்ளது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை. இதன்படி, நாளை ரூ. 3 கோடி பணத்தை கட்டினால் போதும் என்றும், மீதமுள்ள ரூ. 2 கோடி மற்றும் ரூ. 5 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தை திங்களன்று கட்ட அவகாசம் அளிக்கப் பட்டுள்ளது.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் லிங்கா. இப்படம் ரஜினியின் பிறந்த நாளான நாளை ரிலீஸ் ஆகிறது.

இதற்கிடையே, மதுரையைச் சேர்ந்த ரவிரத்தினம் என்பவர் லிங்கா படத்தின் தன்னுடையது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.
அதில், தனது ‘முல்லைவனம் 999' படத்தின் கதையை திருடி, லிங்கா படத்தை தயாரித்திருப்பதால், ரஜினிகாந்த், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கதாசிரியர் பொன்குமரன் மற்றும் படக் குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு டிசம்பர் 3ம் தேதி தனி நீதிபதி முன் விசாரணைக்கு வந்தபோது, ‘கதை திருட்டு என்பது இருவர் இடையிலான தனிப்பட்ட பிரச்சினை. இந்தப் பிரச்சினைக்கு சிவில் நீதிமன்றத்தில்தான் பரிகாரம் தேட வேண்டும். ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது' என்று கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ரவிரத்தினம் மேல்முறையீடு செய்தார். அதில், ‘எனது மனுவுக்கு பதிலளித்து நடிகர் ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனுவில், ‘லிங்கா' படத்தின் கதை மற்றும் திரைக்கதையை பொன்குமரன் எழுதுகிறார் என்று குறிப்பிட்டிருந்தார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தாக்கல் செய்த பதில் மனுவில், ‘லிங்கா' படத்தின் கதையை பொன்குமரன் எழுதியிருப்பதாகவும், படத்தின் திரைக்கதையை தான் எழுதியிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இருவரது பதில் மனுக்களில் முரண்பாடுகள் உள்ளன. இந்த முரண்பாடுகளை தனிநீதிபதி கருத்தில் கொள்ளவில்லை.
கதை திருட்டு தொடர்பான உண்மையைக் கண்டுபிடிப்பதற்கு போலீஸாருக்கு உத்தரவிடுவதற்கு, ரஜினிகாந்த், ரவிக்குமார் ஆகியோரது பதில் மனுக்களில் உள்ள முரண்பாடே போதுமானது. எனவே, தனிநீதிபதியின் உத்தரவை ரத்து செய்து, கதை திருட்டு தொடர்பாக ‘லிங்கா' படக் குழுவினர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
நாளை லிங்கா படம் ரிலீசாக உள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பளிக்கப் பட்டது. அதன்படி, நிபந்தனையுடன் லிங்கா படத்தை ரிலீஸ் செய்யலாம் என நீதிபதி தெரிவித்தார்.
இதுதொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘பல கோடி மதிப்பில் தயாரிக்கப்பட்ட லிங்கா படம் வெளியாவதை தடுக்க முடியாது. இருப்பினும் மனுதாரருக்கு சாதகமான தீர்ப்பு வந்தால் அதற்கு ஏற்றாற்போல் தற்போது லிங்கா படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ரூ.5 கோடியை மதுரை ஐகோர்ட்டில் செலுத்த வேண்டும். மேலும் ரூ. 5 கோடிக்கு வங்கி பிணை பத்திரமும் காண்பிக்க வேண்டும். நாளைக்குள் அவர் பணத்தை கட்டவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
நிபந்தனை தளர்வு:
இந்நிலையில், நாளை படம் ரிலீசாக வேண்டி உள்ள நிலையில், திடீரென இவ்வளவு தொகை கட்டுவது கடினம் என தயாரிப்பாளர் தரப்பில் இருந்து கோரிக்கை முன்வைக்கப் பட்டது. அக்கோரிக்கையின் பேரின் லிங்கா பட ரிலீசுக்கான நிபந்தனையை நீதிபதிகள் தளர்த்தினர்.
அதன்படி, நாளை ரூ. 10 கோடிக்குப் பதில் ரூ. 3 கோடி கட்டினால் போதுமானது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மீதமுள்ள ரூ. 2 கோடி மற்றும் ரூ. 5 கோடிக்கான வங்கி உத்தரவாதத்தை திங்களன்று கட்டவும் அவகாசம் அளித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications