'இது நம்ம ஆளு' - படத்தை திரையிட இடைக்கால தடை: சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை: நடிகர் சிம்பு, நடிகை நயன்தாரா நடித்த, 'இது நம்ம ஆளு' படத்தை கடலூர், விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மட்டும் நாளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
சிம்பு ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த 'இது நம்ம ஆளு' திரைப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக இருந்த நிலையில், இந்தப் படத்தை திரையிட தடை விதிக்க கோரி, சென்னை புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய்குமார் லால்வானி என்பவர் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதில், சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரித்துள்ள 'இது நம்ம ஆளு' படத்தில் நடிகர் சிம்புவும், அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவும் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார்.
ஆனால், இந்த படத்தைத் தயாரிக்க சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் எங்களிடம் ரூ.1.9 கோடி கடனாகப் பெற்றிருந்தது. இந்தக் கடனை 36 சதவீத வட்டியுடன் படத்தை வெளியிடுவதற்கு முன்பாக திருப்பித் தருவதாகவும், அத்துடன் வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதி விநியோக உரிமையையும் தருவதாகவும் உறுதியளித்து இருந்தனர்.
ஆனால், திடீரென வேறு ஒரு நிறுவனம் வாயிலாக தமிழகம் முழுவதும் மே 27-இல் திரையிட திட்டமிட்டுள்ளனர். எனவே, இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம், இது நம்ம ஆளு படத்தை திரையிடக்கூடாது என வழக்குத் தொடர மனுதாரருக்கு போதிய முகாந்திரம் உள்ளது.
எனவே, மனுதாரரிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் வரை வட ஆற்காடு, தென் ஆற்காடு சினிமா விநியோக பகுதிகளான கடலூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மட்டும் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி உத்தரவிட்டார்.