குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க கோர்ட் உத்தரவு
சென்னை: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுப்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரங்கநாயகி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், குழந்தைகளின் மனநலன்களை அறிந்து அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்க வேண்டும், அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு உதவ இலவச தொலைபேசி எண்ணை விளம்பரப்படுத்த வேண்டும்.
குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டம் -2012 சட்டத்தின் படி கீழ் பதிவான வழக்குகளை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்த மத்திய- மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் பரிந்துரைகளை அமல்படுத்த அரசு ஏன் தயங்குகிறது என கேள்வி எழுப்பினர். மேலும் எந்தெந்த பரிந்துரைகள் அமல்படுத்த முடியுமோ அது குறித்தும் அமல்படுத்த முடியாத பரிந்துரைகள் குறித்து பதிலளிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 5 ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.