மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை... நீதிமன்றம் உத்தரவு!
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை : மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் செல்போன் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தவிர கோவிலுக்குள் வேறு யாரும் செல்போன் எடுத்து செல்லக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2ம் தேதி இரவு நடந்த தீ விபத்தையடுத்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் பக்தர்கள் செல்போன் எடுத்து செல்ல சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கிருபாகரன், தாரணி அடங்கிய அமர்வு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதிகாரிகள் தவிர வேறு யாரும் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மத்திய படை பாதுகாப்பு வழங்குமாறு தமிழக அரசு மத்திய அரசைக் கோர வேண்டும்.
கோவிலுக்குள் நவீன ரக தீ தடுப்பு சாதனங்களை அமைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். கோவிலில் இருந்து 1 கி.மீ சுற்றளவில் 9 மீட்டர் உயரத்துக்கு மேல் இருக்கும் கட்டிடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.