கன்னியாகுமரியில் தலைவிரித்தாடும் இந்தி ஆதிக்கம்... தமிழர் பண்பாட்டு மையம் வேதனை!
கன்னியாகுமரி: சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் உள்ள வியாபார நிறுவனங்களில் அதிகரித்துவரும் இந்தித் திணிப்பால் தமிழர் அமைப்புக்கள் கண்டனம் தெரிவிக்க தொடங்கியுள்ளன.
தமிழர் பண்பாட்டு மையத்தின் செயலாளர் இராச்குமார் பழனிச்சாமி இதுதொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில்,
சங்க இலக்கியங்கள் கூட கன்னியாகுமரியை குறிப்பிடும் அளவிற்கு மிகத் தொன்மையான தமிழர் நிலம் கன்னியாகுமரி ஆகும். இப்பகுதியை கேரளத்திடம் இருந்து தமிழ் முன்னோர்கள் பாடுபட்டு மீட்டனர். அப்படி பாடுபட்டு மீட்ட இப்பகுதி இப்பொது இந்தியின் கோரப் பிடியில் சிக்கி இருப்பதை பார்த்தால் மனம் வெம்புகிறது.
திரும்பிய பக்கம் எல்லாம் எங்கும் எதிலும் இந்தி மொழியே இங்கு ஆதிக்கம் செலுத்துகிறது. எல்லா வணிக நிறுவனங்களும் இந்திக்கு மட்டுமே முதல் இடம் தருகின்றன. வணிக பெயர் பலகைகளில் தமிழை காண்பது அரிதாகி உள்ளது. இந்திக்கே முதலிடம்.
சென்னை மாநகரம் ஆங்கிலத்திற்கு முன்னுரிமை கொடுத்து ஆங்கிலத்திற்கு அடிபணிந்தது போல குமரி நகரம் இந்திக்கு இப்போது அடிமையாகிக் கிடக்கிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து வணிக பெயர் பலகைகளும் தமிழ் மொழியில் பெரிதாக எழுதப்பட வேண்டும். மற்ற மொழிகள் எல்லாம் தமிழுக்கு அடுத்தபடியாக இருக்க வேண்டும் என்ற சட்டம் இருந்தாலும், திராவிட அரசுகளின் அலட்சிய போக்கால் தமிழ் மொழி பின்னுக்கு தள்ளப்பட்டது.
தமிழகத்தில் திராவிட ஆட்சி முடிவுக்கு வந்து தமிழர் ஆட்சி வந்தால் மட்டுமே தமிழ் மொழி தான் இழந்த இடத்தை மீண்டும் பெற முடியும்.
மேலும் கன்னியாகுமரி தொடர்ந்து தேசிய கட்சி வேட்பாளரை தான் தேர்வு செய்கிறது. அதன் விளைவாக கன்னியாகுமரி ஒரு குட்டி இந்தியாவாக மாறியுள்ளதை நாம் பார்க்க முடிகிறது. தமிழகம் முழுவதும் இந்தி தேசிய கட்சி ஆட்சி செய்தால் தமிழ்நாடே இந்தி தேசமாக மாறும் என்பதிலும் ஐயம் இல்லை.
கன்னியாகுமரியை தமிழர் நிலமாக மீட்டெடுக்க நாம் அனைவரும் உழைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
சுற்றுலாத்தலங்களை கட்டுப்படுத்த முடியுமா?
சுற்றுலாத் தலங்களில் பல மொழிகளில் பேசும் வியாபாரிகளை சர்வ சாதாரணமாக காண முடியும். ராமேஸ்வரம் போனால் இந்தியில் பேசுவோரை சரளமாக பார்க்கலாம். பெயர் ராமசாமி என்று இருக்கும், ஆனால் அவரோ ராம் ரத்தன் யாதவ் ரேஞ்சுக்கு இந்தியில் கலக்கிக் கொண்டிருப்பார். காரணம், இங்கு நம்மவர்களை விட வட இந்தியர்கள் பெருமளவில் வருகிறார்கள். அவர்களிடம் தமிழில் பேசினால் வியாபாரம் நடத்த முடியாது. இந்தியில் பேசினால்தான் விற்க முடியும். எனவே கற்கிறார்கள், விற்கிறார்கள்.
அதேபோலத்தான் கன்னியாகுமரியும். இது இந்தியாவின் கடைக்கோடி முனை என்பதால் பல மொழி பேசும் மக்கள் இங்கு குவிகிறார்கள். எனவே இங்கு தமிழ் தவிர மலையாளம், இந்தி என பிற மொழி பேசும் வியாபாரிகள் அதிகம். வெளிநாட்டு மொழி பேசுவோரும் கூட உண்டு.
இப்படிப்பட்ட சுற்றுலாத் தலங்களில் இந்தியில் வியாபார நிறுவனங்களின் பெயர்களை வைப்பது இயல்பானதுதான். அதேசமயம், அது இந்தி திணிப்பா என்பதை உள்ளூர் மக்கள்தான் சொல்ல வேண்டும்.