தனது கார் மீது தானே வெடிகுண்டு வீசி நாடகமாடிய ஹனுமன் சேனா பிரமுகர் கைது
திருவள்ளூரில் தனது கார் மீது வெடிகுண்டு வீசி நாடகமாடிய ஹனுமன் சேனா பிரமுகர் காளிகுமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே தனது கார் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக நாடகமாடிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரைச் சேர்ந்தவர் காளிகுமார். இவர் இந்து மக்கள் கட்சியின் துணை அமைப்பான அனுமன் சேனாவின் மாநில செயலாளராக உள்ளார். காளிகுமார் தனது நண்பருடன், காரில் சென்றபோது சோழவரம் சுங்கச்சாவடி அருகே அடையாளம் தெரியாத ஒரு கும்பல் காரை வழிமறித்து பெட்ரோல் குண்டு வீசினர் என்றும் அதில் கார் தீப்பற்றி எரிவதாகவும் போலீஸாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார். கார் தீப்பற்றி எரிவது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

காளிகுமார் தனது காரை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், பெட்ரோல் குண்டு வீசி தாக்கி, தன்னை கொலை செய்ய முயன்றனர் என்று போலீஸாரிடம் அளித்த தகவலின் பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். போலீஸாரின் விசாரணையில் அவர்கள் மீது யாரும் எந்த தாக்குதலும் நடத்தவில்லை என்பது தெரியவந்தது. மேலும், காளிகுமார் தனது கார் மீது பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து காளிகுமார் உள்ளிட்ட 3 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்து மக்கள் கட்சியின் துணை அமைப்பான அனுமன் சேனாவின் மாநில செயலாளர் காளிகுமார் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நாடகம் குறித்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி கூறுகையில், விளம்பரத்துக்காக காளிகுமார் தனது கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக நாடகமாடியிருக்கிறார். இதில் காளிகுமார் உள்ளிட்ட 3 பேர் கைது என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications