கமல்ஹாசன் வீட்டை முற்றுகையிட்ட இந்து மக்கள் கட்சி... போலீஸ் குவிப்பால் பரபரப்பு!
இந்து மக்கள் கட்சியினர் சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
சென்னை: இந்து மக்கள் கட்சியினர் சென்னையில் உள்ள நடிகர் கமல்ஹாசன் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது. இதையடுத்து கமல்ஹாசன் வீடு முன்பாக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் ஆபாசமாக பேசுவதாகவும், சமூக சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் கூறி நிகழ்ச்சியைத் தடை செய்ய இந்து அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்றன.

இதுபோன்ற குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி புகார் கொடுத்த இந்து அமைப்புக்களை நடிகர் கமல்ஹாசன், பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கடுமையாகச் சாடினார்.
இதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள கமல்ஹாசனின் வீட்டை இந்து மக்கள் கட்சியினர் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இந்து மக்கள் கட்சியினர், சமூக சீரழிவு ஏற்படுத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நிறுத்த வேண்டும். இல்லையென்றால் போராட்டம் இன்னும் தீவிரமாகும். கமலஹாசனின் திரைப்படங்களை வெளியாக விடமாட்டோம். அப்படி ஏதாவது திரைப்படங்கள் வெளியானால், தியேட்டர்கள் அடித்து நொறுக்கப்படும்." என்று கூறினர்.
இதனைத் தொடர்ந்து கமல்ஹாசனின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications