கறுப்புப் பணம் என்ற பெயரில் மக்கள் பணத்தைச் சூறையாடிய வங்கிகள்!
கடந்த நவம்பர் 8-ம் தேதித்து முன்பு வரை, உங்கள் வங்கிக் கணக்கில் கொஞ்சம் அதிகமாக பணம் தென்பட்டால், அந்த கணக்கு உள்ள வங்கிக் கிளையின் அதிகாரிகள் உங்களிடம் நைசாக 'பிக்ஸ்ட் டெபாசிட் போடலாமே சார்' என ஆரம்பிப்பார்கள். நீங்களும் கெத்தாக, 'அப்புறம் பாக்கலாங்க' என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டுவோம்.
இப்போது எந்த வங்கியிலாவது, 'என்னிடமுள்ள பணத்தை பிக்ஸ்ட் டெபாசிட்டில் போடுகிறேன்...' என்று சொல்லிப் பாருங்கள். போயா யோவ்... என்று கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளுவார்கள்.
காரணம் இனி நீங்கள் டெபாசிட் பண்ணால் என்ன.. பண்ணாவிட்டால் என்ன... வட்டியே இல்லாமல் அவர்களிடம் குவிந்து கிடக்கிறது உங்களின் பல லட்சம் கோடி நல்ல பணம்.. வெள்ளைப் பணம். அந்தப் பணத்தை இனி வட்டிக்கு கடன்களாகத் தரப் போகிறார்கள். கொஞ்ச ஆண்டுகளில் அதே கடனை தள்ளுபடியும் செய்யப் போகிறார்கள்.
டாக்டர் மன்மோகன் சிங் சொன்னது போல இது சட்டப்பூர்வ சூறையாடல்தான். இதை அவர் சொன்னவுடன் மோடியின் பக்தர்கள் சிலர் 'இவரு யோக்கியமா... இவர் காலத்துலதான் கறுப்புப் பணம் பெருகியது' என அருண் ஜெட்லியின் ஜெராக்ஸ் ஆக வக்காலத்து வாங்கினார்கள். அந்த ஓட்டு அரசியல் இங்கு தேவையில்லை.
டாக்டர் சிங் மிகச் சிறந்த பொருளாதார நிபுணர். அரசியல்வாதி இல்லை. ஒரு பொருளாதார நிபுணராக, நன்கு ஆய்ந்தறிந்து இந்தத் திட்டத்தின் பாதகத்தைச் சொன்னார். ஒரு உண்மை தெரியுமா?
இந்த பண ஒழிப்பு அல்லது பண மதிப்பிழப்புத் திட்டம் 2011-ல் மன்மோகன் சிங் பிரதமராக இருந்த காலத்திலேயே நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்டதுதான். அதை அமலுக்குக் கொண்டு வர மன்மோகன் சிங் இப்படி அவசரம் காட்டவில்லை. காரணம், புழக்கத்தில் உள்ள 14 லட்சம் கோடிக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியது அத்தனை சாதாரண விஷயமில்லை என்பதை அவர் அறிவார். 2011-ல் இதே மாதிரி மன்மோகன் தடாலடியாக, எந்த முன்னேற்பாடுமின்றி, யாரிடமும் சொல்லாமல், எந்த அவையிலும் அனுமதி கேட்காமல் பண ஒழிப்பு செய்து, இதே போல க்யூவில் நின்று மக்கள் செத்திருந்தால், இந்த தேச பக்தர்கள் என்னென்ன பேசியிருப்பார்கள்?
இவ்வளவு பெரிய, முக்கியமான, நாட்டின் உயிர்ப்பிரச்சினைக்கு நிகரான ஒரு விஷயத்தைச் செய்யும் முன், அதுகுறித்து நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டாமா? என்று கேட்டால்... 'இப்படிக் கேட்கும், விமர்சிக்கும் அத்தனைப் பேரும் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களே.. அதெப்படி சொல்ல முடியும்? முடியாது!' என்கிறார் மோடி. எத்தனை பெரிய சர்வாதிகாரம், அகங்காரம்?
இந்திய அரசு என்பது மோடி வீட்டுச் சொத்தல்ல... நிர்வாகமல்ல. 138 கோடி மக்களின் அரசு அது. அவர்களின் பிரதிநியாக பதவிக்கு வந்தவர், இன்று தான் நினைத்ததை எந்த வித முன் அறிவிப்பும் செய்யாமல், இஷ்டப்படிதான் செய்வேன் என்கிறார் பகிரங்கமாக. ஒரு மசோதாவை நிறைவேற்றுமுன் எத்தனை விவாதங்கள், அனுமதிகள் தேவைப்படும் ஒரு ஜனநாயக நாட்டில், இந்த பண ஒழிப்புத் திட்டம் அமலாகும் லட்சணம் பார்த்தீர்களா?
நாடு எத்தனைப் பெரிய ஆபத்தான மனிதரிடம் சிக்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒன்றே போதுமானது. இன்று பிரதமர் பதவியில் அமர்ந்து கொண்டு மோடி செய்து கொண்டிருப்பது மக்களுக்கு சாதகமான விஷயமல்ல என்பதை பல நிபுணர்கள் விதவிதமான வார்த்தைகளில் சொல்லிவிட்டார்கள்.
எளிய மக்களிடம் இருக்கும் சேமிப்புகளை, நடுத்தர வர்க்கத்தினர் வரி செலுத்திய பின் மிச்சமிருக்கும் சேமிப்புகளைப் பிடுங்கிக் கொண்டு, அதைத் திரும்ப எடுக்கக் கூடாது என நிர்ப்பந்திக்கிறார் மோடி. நியாயமாக மக்கள் இப்போது வங்கியில் செலுத்தியுள்ள பணம் முழுவதற்கும் வங்கிகள் வட்டி அளிக்க வேண்டும். ஆனால் இப்படிக் கேட்கும் மனநிலையில் மக்கள் இல்லை. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் குறுக்குப் புத்திதான் ஆட்சியாளர்களுக்கும் வங்கிகளுக்கும் உள்ளது.
மக்கள் பணத்தில் மஞ்சள் குளிக்கப் போகிறார்கள், தேச பக்தி என்ற முகமூடியும் இரண்டு சொட்டு நீலிக் கண்ணீரும்போதும் மக்களை மழுங்கடிக்க என்பதைத் தெரிந்து வைத்திருப்பதால்!