தீவிரவாதம் வேறு, பயங்கரவாதம் வேறு.. அடித்துக்கொண்டே இருக்க நான் மத்தளம் இல்லை: கமல் ஆவேச பேச்சு
சென்னை: இந்துக்களை தீவிரவாதிகள் என நடிகர் கமல் குறிப்பிட்டதாக கூறி, வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு அவர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
இன்று சென்னை கேளம்பாக்கத்தில் ரசிகர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார். தமிழகம் முழுவதும் இருந்து 1,800 ரசிகர்கள் இதில் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின் போது அரசியல் பிரவேசம், ஏரி, குளங்களை தூர் வாருதல் தொடர்பாக ஆலோசித்தார்.
இரு தினங்கள் முன்பு விவசாயிகளுடன் ஆலோசனை நடத்தியபோது, ஏரி, குளங்களை தூர்வாறுவதற்கு தனது ரசிகர்களை அனுப்பி வைக்க உள்ளதாக கமல் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ரசிகர்களுடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றது.
என்ன செய்வார்கள் தெரியுமா?
ஆலோசனைக்கு பிறகு ரசிகர்கள் மத்தியில் கமல்ஹாசன் பேசியதாவது: எத்தனை பேர் உங்களுடன் இருக்கிறார்கள் என்று நம்மை பார்த்து சிலர் ஏளனமாக கேட்கிறார்கள். எத்தனை பேர் என்பது முக்கியமில்லை. என்ன செய்வார்கள் என்பதுதான் முக்கியம் (கைதட்டல்கள்).
வழக்கு போட்டுவிடுவார்கள்
இப்போது, அடக்குமுறை என்பது அதிகமாகிவிட்டது. நான் இந்திய அளவில், சொல்கிறேன். ஏதோ ஒரு கட்சியை மட்டும் சொல்கிறேன் என்று என்மீது வழக்கு போட்டுவிடுவார்கள். நியாயம் கேட்பதற்காக சிறையில் போட ஆரம்பித்தால் சிறையில் இடமே இருக்காது. உள்ளே போடனும் என்றால் யாரை வேண்டுமானாலும் உள்ளே போடலாம்.
தவறான ஆங்கில பதம்
உங்களை பார்த்து, நான் தீவிர ரசிகர்கள் என்று சொன்னால் அதை 'Terror' என்பதாக நீங்கள் அர்த்தப்படுத்தி சொன்னால் சரியா?. நீங்கள் (ரசிகர்கள்) நற்பணிகளில் தீவிரவாதிகள். ஒரு விஷயத்தில் தீவிரமாக இருப்பதை தீவிரவாதி எனச்சொல்லாம். அதற்கு சரியான ஆங்கில வார்த்தை extremist என்பதாகும். எனக்கு பிடித்த காந்தியே extremistதான். ஆங்கிலத்தில் தீவிரம் என்பதன் அர்த்தம் அதுதான்.
அடிவாங்க மத்தளம் இல்லை
நான் அடிவாங்கிக்கொள்கிறேன். ஆனால் சும்மா சும்மா தட்டி பார்க்க கூடாது. நான் ஒன்னும் மிருதங்கம் இல்லை. தீவிரவாதம் வேறு, பயங்கரவாதம் வேறு. எப்போது எதைச் சொல்வார் என எதிர்பார்த்துக்கொண்டிருக்க கூடாது. குற்றம் உள்ளவர்களுக்குத்தானே அந்த பயம் இருக்க வேண்டும்.
எங்கள் வீட்டிலேயே இந்துக்கள்
நாமம், விபூதி, குல்லா, சிலுவை போட்டு வருபவர்கள் இங்கே (ரசிகர்கள் கூட்டம்) உள்ளனர். இந்துக்கள் மனது புண்படும் என்றால் லக்னோ, உ.பியிலுள்ள இந்துக்களுக்கு இல்லை. எனது குடும்பத்தில் உள்ள இந்துக்களுக்கே புண்படும். அவர்களிடம் இவர்கள் மிரட்டுவதை விட பெரிய ஆயுதம்உள்ளது. அன்பு என்ற ஆயுதம் உள்ளது. என்னிடம் அன்பு காட்ட மாட்டேன் என அவர்கள் கூறினால் நான் பயந்துவிடுவேன். இவ்வாறு கமல் பேசினார்.
காவல்நிலையத்தில் புகார்
இந்துக்களிலும் இப்போது தீவிரவாதிகள் உருவாகிவிட்டனர் என்பதை மறுக்க முடியாது என்று வார இதழில் கமல்ஹாசன் எழுதியிருந்த கட்டுரைக்கு பாஜக, சிவசேனை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தில், கமலுக்கு எதிராக காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.