காவிரி பிரச்சனையா.. அவ்ளோ தெரியாதே... சொல்வது காங். பொதுச்செயலர் நடிகை நக்மா!
சென்னை: காவிரி நதிநீர் பிரச்சனை பற்றி தமக்கு அவ்வளவாக தெரியாது என்று அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், தமிழக பொறுப்பாளருமான நடிகை நக்மா கூறியுள்ளார்.
மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நாளை நடைபெறுகிறது. இதையொட்டி சத்தியமூர்த்தி பவனில் மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி மற்றும் நிர்வாகிகள் ஆலிஸ்மனோகரி, மீனா வெங்கட்ராமன், சரஸ்வதி, நாலடியார், மைதிலி தேவி, மானசா ஆகியோருடன் நடிகை நக்மா ஆலோசனை நடத்தினார்.
இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் நடிகை நக்மா கூறியதாவது:
'விவசாயிகள் நாடு முழுவதும் மிகவும் துன்பத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். பலர் தற்கொலை செய்யும் அளவுக்கு சென்றுள்ளனர்.
மத்திய அரசு மீது பாய்ச்சல்
விலைவாசி உயர்வு மிகவும் அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனக்கு தெரியாதே...
காவிரியில் தண்ணீர் திறக்காமல் கர்நாடக அரசு துரோகம் செய்வதாக கூறுகிறீர்கள். எனக்கு இந்த பிரச்சனை பற்றி முழுமையாக தெரியாது.
நடந்தே போனார் ராகுல்
சென்னையில் வெள்ளம் வந்த போது அம்மாவும் மோடியும் ஹெலிகாப்டரில் தான் பறந்தார்கள். ராகுல்காந்தி தண்ணீரில் நடந்து சென்று மக்களின் கஷ்டங்களை பார்த்தார். அப்போது கர்நாடகாவும் உதவி செய்தது.
கர்நாடகாவுக்கு காரணம் இருக்கும்...
அப்படி இருக்கும்போது காவிரி விஷயத்தில் மட்டும் கர்நாடகா மாநிலத்தினர் அநியாயம் செய்ய மாட்டார்கள். அதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கும். அதுபற்றி அந்த மாநில அரசுதான் தெளிவுபடுத்த வேண்டும்.
சட்டம் ஒழுங்கு மோசம்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. குறிப்பாக இளம்பெண்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள். நுங்கம்பாக்கத்தில் சுவாதி கொலை செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து விழுப்புரம், கரூர், தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் இளம்பெண்கள் கொலை செய்யப்பட்டிருப்பதும் இதற்கு சாட்சி.
ஹசினா சையத் விவகாரம்
தற்போது காங்கிரஸ் அகில இந்திய செயலாளர் ஹசினா சையத் கூட பெண்களை ஆபாசமாக மிரட்டியது பற்றி போலீசில் புகார் செய்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பாக நடமாடும் சூழ்நிலையை அரசுதான் உருவாக்க வேண்டும்.
பெண் தலைவர் ஓகே
தமிழக காங்கிரசுக்கு விரைவில் கட்சி மேலிடம் தலைவரை நியமிக்கும். தலைவர் பதவியை பெறுவதில் போட்டி இருப்பதாகவும், ஒரு பெண்ணை தலைவராக நியமிக்க சிபாரிசு செய்வீர்களா என்கிறீர்கள். காங்கிரசை பொருத்தவரை மிகப்பழமையான கட்சி, இந்தியாவில் பெரிய கட்சி. கட்சிக்குள் பிரச்சனைகள் உருவாகத்தான் செய்யும். ஆனால் கட்சி மேலிடம் தீவிரமாக ஆலோசித்து யாரை எப்போது தலைவராக நியமிக்க வேண்டும் என்று முடிவெடுக்கும். பெண்களும் தலைவர் பதவிக்கு ஏற்றவர்கள்தான். பெண்ணை தலைவராக போட்டால் நல்லது என்பது என் தனிப்பட்ட விருப்பம். அதற்காக ஆண்களை எதிர்க்கவில்லை. கட்சிக்குள் ஆண்-பெண் என்கிற பேதம் இல்லை.
இவ்வாறு நக்மா கூறினார்.