சுகேஷ் சந்திரா யாருன்னே தெரியாதாமே தினகரனுக்கு, பேசியது கூட இல்லையாமே!!
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்படும் சுகேஷ் சந்திரா என்பவர் யாரென்றே தெரியாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக லஞ்சம் கொடுத்ததாக கைது செய்யப்படும் சுகேஷ் சந்திரா என்பவர் யாரென்றே தெரியாது என்று டிடிவி தினகரன் ஒரேயடியாக அடித்துப் பேசியுள்ளார்.
இரட்டை இலை சின்னத்தை அதிமுகவின் இரட்டை இலை சின்னம் மற்றும் சசிகலா நியமனம் தொடர்பாக டெல்லியில் சசிகலா, ஓபிஎஸ் அணியிடம் இந்திய தேர்தல் ஆணையம் இன்று மீண்டும் விசாரணை நடத்துகிறது.
இந்த நிலையில்தான் இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக டெல்லியைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திராவிடம் தினகரன் ரூ. 1.03 கோடியை லஞ்சமாக கொடுத்த விவகாரம் வெடித்து வெளியாகியுள்ளது.
தினகரனுக்கு சம்மன்
இதுகுறித்து தகவலறிந்த டெல்லி குற்றப்பிரிவு போலீஸார் தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவிடம் இருந்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்து அவரை கைது செய்தது. இதுதொடர்பாக டிடிவி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தினகரனுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பியுள்ளனர்.
அடேங்கப்பா பேரம்
இரட்டை இலைச்சின்னத்தை பெற சுகேஷ் சந்திராவிடம், டிடிவி தினகரன் ரூ. 60 கோடி ரூபாய் வரை பேரம் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் டெல்லி போலீஸார் தமிழகத்துக்கு வந்து டிடிவி தினகரனை கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.
யார்னே தெரியாது
இதுகுறித்து டிடிவி தினகரன் அடையாறில் உள்ள தனது வீட்டில் தெரிவிக்கையில், சுகேஷ் சந்திரா என்பவர் யாரென்றே எனக்கு தெரியாது. நான் லஞ்சம் கொடுத்ததாக ஒரு கைது செய்யப்பட்டதை டிவியில் பார்த்து தெரிந்து கொண்டேன். இதுதொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி சம்மன் வந்தால் சட்டப்படி எதிர்கொள்வேன். யாரையோ கைது செய்திருக்கிறார்கள், எனக்கும் அந்த நபருக்கும் சம்பந்தம் இல்லை.
அதிமுகவை அழிக்க சதி
அதிமுகவை அழிக்க என் மீது லஞ்ச பழி சுமத்தி சதி செய்கின்றனர். நான் யாரிடமும் போனில் பேசவில்லை என்கிறபோது என் மீதான பொய்யான குற்றச்சாட்டுக்கு நான எப்படி பொறுப்பாக முடியும் என்று தினகரன் தெரிவித்தார்.
பேசியதுக்கு ஆதாரம் இருக்கே
பேட்டியின்போது நான் அவரிடம் நேரடியாக பேசினேன் என்று எப்ஐஆரில் போட்டுள்ளனரா என்று திரும்பத் திரும்ப கேட்டார் தினகரன். அப்போது ஒரு செய்தியாளர், ஆம் அப்படித்தான் உள்ளது என்று கூறியபோது தினகரன் ஜெர்க் ஆகி பின்னர் சுதாரித்து நோ, நோ, அப்படியெல்லாம் இல்லை என்று தலையை ஆட்டியபடி மறுத்தார்.