நான் விஜயபாஸ்கரிடம் பணம் பெறவேயில்லை.. டாக்டர் பாலாஜி திடீர் பல்டி
சுகாதாரத்துறை அமைச்சர் தனது உதவியாளர் மூலம் ரூ.5 லட்சம் பணத்தை எனக்கு தந்ததாகவும், நான் ஹோட்டல் பில்லை கட்டியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது ஒரு அடிப்படையற்ற, பொய் செய்தியாகும் என பாலாஜி கூறியுள
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ஐடி அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, அரசு டாக்டர் பாலாஜிக்கு ரூ.5 லட்சம் கொடுத்ததற்கான ஆவணங்கள் சிக்கின.
கடந்த ஆண்டு, இறுதியில், அதிமுக கட்சி வேட்பாளர்கள் தஞ்சை உள்ளிட்ட தொகுதிகளின் இடைத் தேர்தலில் போட்டியிட்டபோது, கட்சியின் சார்பிலான Form-Bயில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடியே ஜெயலலிதா கைரேகை வைத்ததாக கூறப்பட்டது.
அரசு டாக்டரான பாலாஜிதான் இதற்கு அத்தாட்சி கையெழுத்திட்டார். எனவே இவருக்கு வழங்கப்பட்ட ரூ.5 லட்சத்திற்கான காரணம் என்னவாக இருக்கும் என்ற யூகம் பரவலாக பேசப்பட்டது.
பேட்டியளித்தாரா?
ஆனால் நாளிதழுக்கு அளித்த பேட்டியொன்றில், அப்பல்லோவுக்கு வந்த லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு ஹோட்டலில் அறை எடுத்து தங்க வைக்கவே அந்த பணம் பெறப்பட்டதாக பாலாஜி கூறியிருந்தாராம். இவ்வாறு அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
அறிக்கை
இந்த நிலையில், பாலாஜி இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: பல்வேறு செய்தித்தாள்களிலும், மீடியாக்களிலும் நேற்றும், இன்றும் சுகாதாரத்துறை அமைச்சர் தனது உதவியாளர் மூலம் ரூ.5 லட்சம் பணத்தை எனக்கு தந்ததாகவும், நான் ஹோட்டல் பில்லை கட்டியதாகவும் செய்திகள் வெளியாாகியுள்ளன.
பேட்டி கொடுக்கவில்லை
இது ஒரு அடிப்படையற்ற, பொய் செய்தியாகும். எந்த ஒரு செய்தித்தாளுக்கும் அல்லது எந்த ஒரு மீடியாவுக்கும் நான் இது தொடர்பாக இன்டர்வியூ கொடுக்கவில்லை. அதேபோல, நான் யாரிடமும் எந்த பணத்தையும் கட்டணமாகவோ அல்லது வேறு எதற்கோ பெறவில்லை.
விளக்கம் கொடுங்கள்
எனவே, எனது இந்த விளக்கத்தை உடனடியாக உங்கள் மீடியாவில் வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நன்றி. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆதாரம் வருமா?
பாலாஜி பேட்டியளித்ததாக செய்தி வெளியிட்டது ஒரு முன்னணி தமிழ் நாளிதழ் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பாலாஜி பேட்டிக்கான ஆதாரங்களை செய்தித்தாள் வெளியிடுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.