என்னால் ஆட்சிக்கு வரமுடியாது... எனக்கு நல்லாவே தெரியும்... திருமாவளவன்
என்னால் ஆட்சிக்கு வரமுடியாது என்பது எனக்கு நல்லாவே தெரியும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை: மற்ற அரசியல் கட்சியினரை போல் நான் ஆட்சிக்கு வருவேன் என்று சொல்ல மாட்டேன், ஏனெனில் என்னால் ஆட்சிக்கு வர முடியாது என்பது நல்லாவே தெரியும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
நெடுவாசலில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கண்டித்து கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் 20 நாட்களுக்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகம் சார்பிலும், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில் மக்களின் ஒப்புதலின்றி திட்டம் செயல்படுத்தப்படாது என்று உறுதியளித்த மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் 17 நிறுவனங்களுடன் நாடு முழுவதும் நெடுவாசல் உள்பட 33 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எடுக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
பொதுமக்கள் எதிர்ப்பு
இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 2-ஆவது கட்ட போராட்டத்தை நெடுவாசலில் தொடங்கினர். 42-ஆவது நாளாக நடைபெற்று வரும் போராட்டத்தில் திருமாவளவன் கலந்து கொண்டார்.
மண்ணைக் காக்க...
அவர் பேசுகையில், இந்த போராட்டம் மண்ணைக் காக்கும் போராட்டம். இதுவரை தலைவர்கள் போராட்டம் நடத்தி மக்களை அதில் கலந்து கொள்ள செய்வது தான் வழக்கம். ஆனால் மக்கள் நடத்தும் இந்த போராட்டத்தில் அரசியல் கட்சித் தலைவா்கள் தானாக கலந்து கொண்டு மக்கள் பின்னால் நிற்கின்றனர்.
நான் ஆட்சிக்கு வந்தால்...
மற்ற அரசியல் கட்சித் தலைவர்கள் நான் ஆட்சிக்கு வந்தால்...அதை செய்வேன், இதை செய்வேன் என்பார்கள், ஆனால் நான் ஆட்சிக்கு வரமுடியாது. இது எனக்கு நல்லாவே தெரியும். தமிழகத்தில் ஆட்சி நடக்கவே இல்லை.
ஊழலோ ஊழல்
அரசியல்வாதிகளுக்கு ஊழல், முறைகேடுகளை சொல்லிக் கொடுப்பதே அதிகாரிகள்தான். ஹைட்ரோ கார்பன் எடுக்க மக்கள் விடமாட்டார்கள். மத்திய ஆட்சியாளர்கள் இதை கைவிட வேண்டும் என்றார் அவர்.