அத்தை ஜெ.வின் முகத்தை கடைசியாக பார்க்க 7 மணி நேரம் நடுரோட்டில் காத்திருந்தேன் - தீபா உருக்கம்
அத்தையின் முகத்தை பார்ப்பதற்காக நான் பெரும் போராட்டத்தை நடத்தினேன் என்று ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கூறியுள்ளார்.
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார். அவருடன் இருந்தவர்கள் தவிர தமிழக மக்கள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உறவினர்கள் யாராலும் ஜெயலலிதாவை பார்க்க முடியாமலேயே போய் விட்டது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், உடல் நலம் சரியில்லாத அத்தையை பார்க்க போய் 3 நாட்கள் வாசலிலேயே காத்திருந்ததாக கூறினார். ஆனாலும் மருத்துவமனைக்குள் விடாமல் பாதுகாவலர்கள் தடுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
டிசம்பர் 4ம் தேதி அத்தைக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்ட உடன் மருத்துவமனை வாசலுக்கு சென்றேன். ஆனால் அப்போதும் பார்க்க விடாமல் தடுத்து விட்டனர். அத்தையின் மரணச் செய்தியைக் கேட்டு போயஸ் கார்டன் வீட்டிற்குத்தான் ஓடினேன். ஆனால் நான் தடுக்கப்பட்டேன். 7 மணி நேரம் சாலையில் காத்திருந்தேன்.
அத்தை என்னை பார்க்க விரும்பவில்லை என்று அவர் உயிரோடு இருந்த போது தடுத்தார்கள். இப்போதுதான் அத்தை உயிரோடு இல்லையே அப்புறம் ஏன் வர விடாமல் தடுத்தார்கள் என்பதுதான் என்று கேட்டார் தீபா.
மரணத்திற்கு பின்னர் அத்தையின் உடலை ராஜாஜி அரங்கில் வைத்திருந்தார்கள். அத்தையின் முகத்தை கடைசியாக பார்க்க நான் போரடியது அங்கிருந்த அனைவருக்கும் தெரியும் என்றும் தீபா உருக்கத்துடன் கூறினார்.