அத்தை கையைப் பிடித்து ஆறுதல் சொல்ல வேண்டும்.. கண்ணீர் விட்டு அழும் ஜெ. அண்ணன் மகள்
சென்னை: அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வரும், எனது அத்தையுமான ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்க மருத்துவிட்டதாகவும், மருத்துவமனையின் கேட்டில் இருந்து திரும்பி விட்டதாகவும் ஜெயலலிதாவின் சொந்த அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22ம் தேதி முதல் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 15 நாட்களாக அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவருடன், சசிகலா, இளவரசி ஆகியோர் மட்டுமே உடல் இருக்கின்றனர். ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாகியும் இன்னும் ரத்த சம்பந்தப்பட்ட சொந்தங்கள் யாரும் அவரை பார்க்க அனுமதிக்கவில்லை.
[Read This: அரசை வழி நடத்தும் அப்பல்லோ மருத்துவமனையின் 'அந்த இரு' அறைகள்! உள்ளே இருப்பது யார் தெரியுமா?]
ஜெயலலிதாவின் சொந்த அண்ணன் ஜெயகுமாரின் மகள் தீபா இவர், சென்னை தி. நகரில் வசித்து வருகிறார். ஆங்கில இலக்கியம் மற்றும் இதழியல் படித்துள்ளார். இவரது சகோதரர் தீபக் எம்.பி.ஏ முடித்துவிட்டு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அப்பல்லோ மருத்துவமனைக்கு ஜெயலலிதாவைக் காண தீபா சென்ற போது கேட்டிற்குள் கூட யாரும் விடவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.
அத்தையை பார்க்க அனுமதியில்லை
பிரபல ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், என் மீது எனது அத்தைக்கு அளவு கடந்த பாசம் உள்ளது. அவரது கையைப் பிடித்து உங்களுக்கு ஒன்றும் ஆகாது. நீங்கள் விரைவில் குணமடைந்து விடுவீர்கள் என்று கூற நான் ஆசைப்படுகிறேன். ஆனால், என்னைப் பார்க்க யாரும் அனுமதிக்கவில்லை.
அப்பல்லோ மருத்துவமனை
எனது அத்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட விஷயத்தை நான் பத்திரிகை வாயிலாகத்தான் தெரிந்து கொண்டேன். தெரிந்த பின்னர் தினமும் தொடர்ந்து மூன்று நாட்கள் மருத்துவமனை வாயிலுக்கு சென்று நின்று கொண்டு இருந்தேன். அனுமதி கேட்டேன். ஆனால், அத்தையைப் பார்க்க என்னை அனுமதிக்கவில்லை. அங்கு இருந்தவர்களும் நான் எதோ அரசியல்வாதியின் சொந்தம் என்று நினைத்துக் கொண்டனர்.
யாரும் அழைக்கவில்லை
என்னை உள்ளே விட்டால்தான் நான் இந்த இடத்தை விட்டுப் போவேன். இல்லையென்றால் போகமாட்டேன் என்று கூறி நின்று கொண்டு இருந்தேன். அப்படி கூறியும், என்னை அனுமதிக்கவில்லை. என்னை உயர் அதிகாரிகள் தொடர்பு கொள்வார்கள் என்று கூறினார்கள். ஆனால், இதுவரை யாரும் என்னை அழைக்கவில்லை.
அத்தையுடன் தொடர்பு இல்லை
எங்களுடைய அப்பா கடந்த 1995ஆம் ஆண்டில் இறந்தபோது எனது அத்தை எங்களது வீட்டுக்கு வந்து இருந்தார். சிலர் எனது அத்தையை எங்களது சொந்த பந்தத்தில் இருந்து விலக்கி வைத்து விட்டனர். கடந்த 2012ஆம் ஆண்டில் எனது அம்மா விஜயலட்சுமி உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது, என்னால் எனது அத்தையை தொடர்பு கொள்ள முடியவில்லை.
என்ன நடக்கிறது?
எனது அத்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாகியும் அவருக்கு என்ன நடந்தது என்று இதுவரை யாருக்கும் தெரியவில்லை. இது மிகவும் மோசமான சூழ்நிலை. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். யார் இந்த ரகசியத்துக்கு பின்னணியில் உள்ளனர் என்பதை கண்டறிய வேண்டும் என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள்
செவ்வாய்கிழமையன்று சசிகலாவின் உறவினர்கள், குடும்பத்தினர் அனைவரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்று முதல்வர் ஜெயலலிதாவை பார்க்கச் சென்றுள்ளனர். ஆனால் ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் யாருக்கும் இதுவரை ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.