அரசை வழி நடத்தும் அப்பல்லோ மருத்துவமனையின் 'அந்த இரு' அறைகள்! உள்ளே இருப்பது யார் தெரியுமா?
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா இரு வாரங்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அரசை யார் நடத்திவருகிறார்கள் என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
செயற்கை சுவாசம் மூலம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை வழங்கப்படுவதாக நேற்றுமுன்தினம் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்திருந்தது. நேற்று வெளியிட்ட அறிக்கையிலும், கடந்த கால சிகிச்சை முறைகளே தொடருவதாக குறிப்பிட்டிருந்தது. எனவே வென்டிலேட்டர் உதவியோடுதான் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை நடப்பது உறுதியாகிவிட்டது.
இதுபோன்ற சூழ்நிலையில், அரசு நிர்வாகத்தை யார் நடத்துவது என்ற கேள்வி அனைத்து தரப்பிலும் எழுகிறது.

சசிகலா, ஷீலா பாலகிருஷ்ணன்
சிலர் ஜெயலலிதாவின் தோழி, சசிகலா அதிகாரிகளுக்கு கட்டளை பிறப்பிப்பதாக கூறுகிறார்கள். ஆனால் சசிகலா, கட்சி நிர்வாகங்களைதான் கவனித்து வருவதாகவும், அரசு நிர்வாகத்தை கவனிப்பது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வர் ஜெயலலிதாவின் ஆலோசகருமான ஷீலா பாலகிருஷ்ணன்தான் எனவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைமைச் செயலகம்
அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அரசின் அங்கங்கள், ஷீலா பாலகிருஷ்ணனிடம்தான் விவரங்களை சமர்ப்பிப்பதாக கூறப்படுகிறது. இவரது தலைமையில், தலைமைச் செயலாளர்கள், முதல்வரின் செயலாளர்கள் என ஆறு பேர் குழு அசராமல் இயங்கி வருகிறது என்று அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

இரு அறைகள்
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டுள்ள அறைக்கு அடுத்தாற்போல ஒரு அறையில் சசிகலா, இளவரசி தங்கியுள்ளதாகவும், மற்றொரு அறையில் ஷீலா பாலகிருஷ்ணன் தங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அப்பல்லோ ஆஸ்பத்திரியின் 2வது மாடி இப்போது, மற்றொரு தலைமைச் செயலகம் போல மாறியுள்ளது.

சீர்குலையாமல் போகிறது
ஷீலா பாலகிருஷ்ணன், இதுவரை எந்த ஒரு கொள்கை சார்ந்த முடிவுகளையும் மாற்றியமைக்கவில்லை. அதேநேரம், நிர்வாகம் சீர்குலைந்துவிடாமல் இருக்க முட்டுக் கொடுக்கும் பணியைத்தான் செய்து வருகிறாராம். இந்நிலையில்தான், திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டிருந்த அறிக்கையொன்றில், நிஜத்திற்குதான் மக்கள் வாக்களித்தனரே, தவிர நிழல்களுக்கு கிடையாது.. என குறிப்பிட்டது முக்கியத்துவம் பெறுகிறது.

யார் இந்த ஷீலா பாலகிருஷ்ணன்?
1976ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான, ஷீலா பாலகிருஷ்ணன், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர். 2014ல் ஷீலா பாலகிருஷ்ணன், பணி ஓய்வு பெற்றார். ஆனால், ஜெயலலிதா அரசோ, முதல்வருக்கான ஆலோசகராக ஷீலா பாலகிருஷ்ணனை நியமித்தது. 2002ம் ஆண்டு முதல், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக மாறினார் ஷீலா பாலகிருஷ்ணன்.

மீண்டும் முக்கியத்துவம்
அதேநேரம், திமுக ஆட்சிக்கு வந்தபோது ஷீலா பாலகிருஷ்ணனின் முக்கியத்துவம் பறிக்கப்பட்டிருந்தது. 2001ல் ஜெயலலிதா மீண்டும் ஆட்சியை பிடித்ததும், முக்கிய பொறுப்புகள் அவருக்கே வழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications