மக்கள் விரும்பினால் ஆர்.கே.நகரில் போட்டி.. சொல்கிறார் தீபா
மக்களும், தொண்டர்களும் விரும்பினால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தீபா கூறியுள்ளார்.
சென்னை: தமிழகமே மாறிப் போய்க் கிடக்கிறது. இளைஞர்கள் சக்தியைப் பார்த்து அத்தனை கட்சிகளும் அடி வயிறு கலங்கிப் போய்க் கிடக்கின்றன. ஆனால் இப்போதும் கூட தீபா வீட்டுக்குப் போய் நீங்க அரசியலுக்கு வந்தே ஆகனும் என்று ஒரு கூட்டம் கோஷமிட்டுக் கொண்டிருப்பதுதான் வியப்பாக உள்ளது.
தமிழக சமூக களம் மிகப் பெரும் மாற்றத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இளைஞர்களும், மாணவர்களும், ஏன் பொதுமக்களுமே கூட தங்களது நிலையை உணர்ந்து விட்டனர். நாம் யார் நமது சக்தி என்ன என்பதை அவர்கள் புரிந்து கொண்டு விட்டனர். இதனால் தமிழக அரசியல் களத்திலும் மிகப் பெரிய மாற்றம் வரும் என்ற உணர்வும், எதிர்பார்ப்பும் அனைவரிடமும் ஓங்கி நிற்கிறது.
இதன் காரணமாக இனிமேலும் அரசியலில் யார் வேண்டுமானாலும் கோலோச்சலாம் என்ற கொடுமையான நிலை தகர்க்கப்பட்டு விட்டதாக அரசியல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். இந்த நிலையில் இளைஞர்கள் புரட்சியில் தீபா என்ற திடீர் பரபரப்பு அப்படியே அமுங்கிப் போனதை யாரும் மறந்திருக்க முடியாது. ஆனாலும் தீபாவின் ஆதரவாளர்கள் ஓய்வதாக இல்லை. இன்னும் கூட தீபா வீட்டுக்குப் போய் பால்கனியைப் பார்த்தபடி நின்று கொண்டுள்ளனர்.

நேற்றும்
நேற்றும் கூட தீபா வீட்டு முன்பு திரண்டனர் அவரது ஆதரவாளர்கள். பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த அவர்கள் தீபாவை வாழ்த்தியும், அவர் விரைவில் அரசியலுக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷமிட்டபடி இருந்தனர். அவர்கள் மத்தியில் தோன்றிய தீபா வழக்கம் போல பால்கனியிலிருந்தபடி பேசினார்.

நன்றி
தீபா பேசுகையில், மீண்டும் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் தொண்டர்களுக்கு நன்றி. புரட்சித் தலைவர் வழியிலும், புரட்சித் தலைவி அம்மா வழியிலும் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இடையில் தேவையற்ற கருத்துக்களையும், வதந்திகளையும் பரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதனை யாரும் நம்ப வேண்டாம்.

என் இரு கண்கள்
தமிழ்நாடும், தமிழ் மக்களும் என் இரண்டு கண்களாக செயல்படும் என்று நான் ஏற்கனவே கூறியிருக்கிறேன். அதில் எந்த மாற்றமும் இருக்காது. எந்தவொரு காலக்கட்டத்திலேயும் என்னை நம்பி வந்தவர்களை நான் கைவிட மாட்டேன். மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான் என்ற புரட்சித் தலைவி அம்மா வழியில் நடப்பதுதான் என் வழியாக இருக்கும்.

மக்கள் பணி
மக்கள் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ளேன். தொடர்ந்து பணிகளை செய்துகொண்டிருப்பேன். எத்தனை தடைகள் வந்தாலும், தொடர்ந்து பணிகளை செய்து கொண்டிருப்பேன். அனைவரின் கருத்துக்களும் கேட்டுக்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து உங்களது கருத்துக்களை அளியுங்கள்

கருத்துக்களைப் பரிசீலிக்கிறேன்
தொண்டர்களின் கருத்துக்களைத் தொடர்ந்து அறிந்து வருகிறேன். பெரும்பாலான தொண்டர்களின் கருத்துக்களை அறிந்து கொண்டுள்ளேன். எனது சுற்றுப்பயணம் குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் அறிவிப்பேன்.

பிப்ரவரி 24ம் தேதி
எனது முக்கிய முடிவுகளை பிப்ரவரி 24ம் தேதியன்று அறிவிப்பேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. நிச்சயம் முடிவை அறிவிப்பேன். அதுதொடர்பான தேவையற்ற வதந்திகளைத் தவிர்க்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

ஆர்.கே.நகரில் போட்டி
ஆர்.கே.நகரில் மக்கள் விரும்பினால், தொண்டர்கள் விரும்பினால் நான் போட்டியிடுவேன். அது மட்டுமல்ல அனைத்துத் தேர்தல்களிலும் நாங்கள் போட்டியிடுவோம். அதை நாங்கள் தவிர்க்க மாட்டோம்.

மாணவர் போராட்டத்துக்கு ஆதரவு
மெரீனா போராட்டத்தினபோது நானும், எனது கணவரும், நண்பர்களும் அங்கு சென்றிருந்தோம். மாணவர்களைச் சந்தித்து பேசினோம். அவர்களது தேவைகள் என்ன என்று கேட்டு அதைச் செய்தோம். அவர்கள் இதில் அரசியலை விரும்பவில்லை என்று கேட்டுக் கொண்டதால் நாங்கள் சந்தித்தது, பேசியதை நான் ஊடகங்களுக்குத் தெரிவிக்கவில்லை, விமர்சனப்படுத்தவில்லை என்றார் தீபா.












Click it and Unblock the Notifications