லஞ்சம் வாங்குவதில் முதல்வர் ஓ.பி.எஸ் முதலிடம்: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதிரடி
சென்னை: ஊழல் அமைச்சர்கள் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் தினம் ஒன்றாக ரிலீஸ் செய்யப்போவதாக அறிவித்து மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். லஞ்சம் வாங்குவதில் முதல்வர் முதல் இடத்தில் இருக்கிறார் என்றும் புது புகார் ஒன்றினை கிளப்பியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சென்னையில் இருந்தால் பத்திரிகையாளர் சந்திப்பு, இல்லாவிட்டால் அறிக்கை என்று ஊடங்களின் மூலம் மக்களை சந்தித்து வருகிறார்.
ஊழல் அமைச்சர்களைப் பற்றிய பட்டியலை ஆளுநரிடம் கொடுத்த கையோடு வெளியூர் பயணமான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீண்டும் சென்னை திரும்பிய கையோடு, நேற்று சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.
முதல்வர் முதலிடம்
தமிழகத்தில் தொடர்ந்து அரசு அதிகாரிகள் இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். எனவே அரசு அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எங்கு பார்த்தாலும் லஞ்சமும், ஊழலுமாக உள்ளது. லஞ்சம் வாங்குவதில் முதல்வர் முதல் இடத்தில் இருக்கிறார்.
நாங்களே வெளியிடுவோம்
அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் ஏற்கனவே வழங்கியிருக்கிறோம். இன்னும் 2 வாரத்தில் நடவடிக்கை இல்லையெனில் நாங்கள் ஒவ்வொரு நாளும் அமைச்சர்களின் ஊழல் பட்டியலை ஆதாரத்துடன் வெளியிடுவோம்.
கரும்பு நிலுவைத் தொகை
தனியார் கரும்பு ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.825 கோடி நிலுவை தொகையாக உள்ளது. இந்த தொகையை பெறுவதற்காக கரும்பு விவசாயிகள் ஆலை நிர்வாகத்திற்கும், மாநில அரசுகளுக்கும் இடையே போராடிக் கொண்டு வருகிறார்கள்.
விவசாயிகளுக்கு ஆதரவு
ஆனால் இது குறித்து இதுவரை மாநில அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கரும்பு விவசாயிகள் இது தொடர்பாக நடத்தும் அனைத்து போராட்டங்களுக்கும் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்றார்.
ராகுல் வருகை
ராகுல்காந்தி தெலுங்கானாவில் விவசாயிகளை சந்தித்து பேசிய பின்னர் கேரளா செல்கிறார். இந்த மாதம் இறுதியில் அவர் தமிழகம் வந்து விவசாயிகளை சந்தித்து பேசுவார் என்று நினைக்கிறேன்.
ஒன்றிணைந்த தலைவர்கள்
விஜயகாந்த், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து வருகின்றனர். இதுபற்றிய கேள்விக்கு பதிலளித்த இளங்கோவன், தமிழகத்தின் நலனுக்காக குரல் கொடுக்க எதிர்கட்சித்தலைவர் எல்லோரும் ஒன்றிணைந்து இருக்கிறார்கள். இது ஆரோக்கியமானது. வரவேற்கத்தக்கது என்றார்.
கடித அறிக்கை
மு.க.ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ் இடையேயான கடித அறிக்கைகள் பற்றி கருத்து கூறிய ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், கருத்துக்களை கூறுவதற்கு ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது. அதை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் வெளிப்படுத்தலாம். தற்போது தமிழகத்தில் நடக்கும் லஞ்சம், ஊழலை பற்றி அனைவரும் பேச முன்வந்திருக்கிறார்கள். இது நல்லது தான் என்று கூறினார்.