மதுரையில் மே19ம் தேதி முதல்வராக பதவியேற்பேன்: விஜயகாந்த்
மதுரை: சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மே 19ம் தேதி மதுரையில் முதல்வராக பதவியேற்பேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். மதுரையில் தேர்தல் பிரச்சாரம் செய்த அவர் இதனை தெரிவித்தார்.
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 16ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 19ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினமே முடிவுகள் தெரிந்து விடும்.
தமிழகத்தில் திமுக, அதிமுக, தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி , பாஜக, பாமக, என 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இது தவிர நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது, காந்திய மக்கள் இயக்கம், சிங்கக் கூட்டணி, ஜான்பாண்டியன், கார்த்திக் தலைமையில் ஒரு கூட்டணி என பல கட்சிகள் தேர்தலை தனித்தே சந்திக்கின்றன.
தேர்துலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை முதல் தொடங்கியுள்ளது. 29ம் தேதிவரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். அக்னி வெயிலை விட அரசியல் களம் பரபரபப்பாக உள்ள இந்த சூழ்நிலையில் தலைவர்களின் தேர்தல் பிரச்சாரமும் களைகட்டத் தொடங்கியுள்ளது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்தில் காரம் இருந்தாலும் வழக்கமாக சில காமெடி காட்சிகளும் அவ்வப்போது அரங்கேரத்தான் செய்கிறது.
மதுரையில் விஜயகாந்த்
தமிழகத்தில் பல மாவட்டங்களில் விஜயகாந்த் பிரச்சாரம் செய்து வந்தாலும் சொந்த ஊரான மதுரையில் பிரச்சாரம் செய்வது கூடுதல் சுவாரஸ்யம்தான். கடந்த வாரம்தான் மீனாட்சி திருக்கல்யாண தினத்தன்று பிரச்சாரம் செய்த பிரேமலதா மதுரையின் மருமகள் என்று கூறி சென்டிமெண்ட் டச் கொடுத்து விட்டு போயிருந்தார்.
நான் முதல்வர்
ஞாயிறன்று பிரம்மாண்ட மக்கள் கூட்டத்திற்கு நடுவே பிரச்சாரம் செய்த விஜயகாந்த் வழக்கமான அறிவிப்புகளுக்குப் பின்னர், தனது பாணியில் பேச்சை தொடங்கினார். சத்தம் போடாதீங்க, எனக்கு கோவம் வரும் என்று அவ்வப்போது கூறினார்.
மதுரையில் பதவியேற்பு விழா
மே 16ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது... 17, 18, 19 என்று விரல் விட்டு எண்ணிய விஜயகாந்த், 19ம் தேதி மதுரையில் முதல்வராக உங்க முன்னாடி பதவியேற்பேன் என்று கூறினார்.
இருவரும் ஒன்றுதான்
ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒண்ணுதான். அவங்க வேட்டி கட்டின ஜெயலலிதா.... இவங்க சேலை கட்டின கருணாநிதி என்று கூறினார் விஜயகாந்த். இரண்டுபேருமே ஒரே மாதிரிதான் யோசிப்பாங்க அதனாலதான் அப்படி சொன்னேன் என்று கூறிய அவர் வாட்சை பார்த்து விட்டு பேச்சை முடித்துக்கொண்டார்.
நாலு வரி என்றாலும் நச்
விஜயகாந்த் வழக்கமான கோபங்கள், நாக்கு கடித்தல், முறைத்தல்களுக்கு நடுவே நான்கு வார்த்தைகள் சுருக்கமாக பேசினாலும், நச் என்று பேசி பிரச்சாரத்தை முடித்துக்கொள்கிறார். போகும் இடங்களில் எல்லாம் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடக்கும் போர் என்று கூறத் தவறுவதில்லை.
இரவோடு இரவாக பதயேற்பாரா?
மே 19ம் தேதி மதுரையில் பதவியேற்புவிழா என்று விஜயகாந்த் சொன்னதுதான் எப்படி என்று தெரியவில்லை. ஏற்கனவே யாருக்கு என்ன பதவி என்று முடிவு செய்து வைத்து விட்டதால் வாக்கு எண்ணிக்கை முடிவு அறிவிக்கப்பட்ட உடனேயே விமானம் மூலம் மதுரைக்கு வந்து பதவியேற்பு விழா நடத்துவாரோ? இதை நான் கேட்கலை... மக்கள் கேட்பார்களே!