குஷ்புவை பற்றி நான் எதுவுமே சொல்லவில்லையே- கார்த்தி சிதம்பரம்
கோவை : குஷ்புவை பற்றி நான் எதுவும் விமர்சிக்கவில்லை. எந்த ஒரு தனிநபரை பற்றியும் விமர்சிக்க விரும்பவும் இல்லை என கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய கார்த்தி சிதம்பரம், "குஷ்புவை பற்றி நான் எதுவும் விமர்சிக்கவில்லை. எந்தத் தனிநபரை பற்றியும் நான் விமர்சிக்கவில்லை. விமர்சிக்க விரும்பவும் இல்லை. என்னிடம் நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இருக்கிறதா என கேட்டார்கள். அதற்கு நடிகைகளை நம்பி காங்கிரஸ் கட்சி இல்லை என்று தான் சொன்னேன். மற்றபடி நான் யாரைப் பற்றியும் நான் விமர்சிக்கவில்லை.
மதுவிலக்கை தவிர்த்து கோவன் சொன்ன மற்ற கருத்துகளை ஏற்க முடியாது. ராஜீவ்காந்தி கொலையையும், மன்மோகன்சிங் பற்றி விமர்சித்ததையும் ஏற்க முடியாது. டாஸ்மாக்கை மூட வேண்டும் என்பதைத் தாண்டி கோவனின் எந்தக் கருத்தையும் நாங்கள் ஆதரிக்கவில்லை.
தமிழகத்தில் 7 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் உள்ளன. பள்ளிகளை விட டாஸ்மாக் கடைகள் தான் அதிகம் உள்ளன. கல்வியில் முன்னிலையில் உள்ள தமிழகத்தில் டாஸ்மாக் வருமானத்தை வைத்து அரசு நடக்கிறது என்பது கொச்சைத்தனமான விஷயம். தொழில்துறையை மையப்படுத்தி பொருளாதாரம் இருக்க வேண்டும். டாஸ்மாக்கை வைத்து இருப்பது மோசமானது.
காங்கிரஸ் தன் நிலையை தாண்டி சிந்திக்க கூடாது. தன் எல்லைக்குள் சிந்தனை, எதிர்பார்ப்புகளை வைக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு பெரிய அளவில் வாக்குகளை வாங்கவில்லை. கன்னியாகுமரி, சிவகங்கையில் தான் லட்சம் வாக்குகளையே தாண்டினோம். எனவே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என எண்ணுவது பொருத்தமாக இருக்காது. ஆட்சியில் பங்களிப்பு இருக்கும் என நம்புகிறேன். தற்போது உள்ளதை விட கூடுதலாக பிரதிநிதித்துவம் பெற்று, நிச்சயம் தொழிலுக்காக, தொழில் வளர்ச்சிக்காக காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கும்.
தமிழகத்தில் தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்ததில்லை. காங்கிரஸ் பாரதிய ஜனதா கட்சிகள் அணி சேர்ந்ததில்லை. இவர்களை தவிர எல்லா கட்சியும் எல்லோருடனும் கூட்டணி அமைத்துள்ளார்கள். கொள்கை ரீதியிலான கூட்டணி என்பதெல்லாம் இங்கு இல்லை. எல்லோருடைய கதவும் எல்லோருக்கும் திறந்திருக்கும். அதேபோல் எங்கள் கதவும் எல்லோருக்கும் திறந்திருக்கிறது. தியேட்டர்கள் கை மாறிய விவகாரத்தில் விளக்கம் அளிக்கப்பட வேண்டியவர்கள் விளக்கம் அளிக்கப்பட வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் மட்டும் கோஷ்டி பூசல் இருப்பதாகச் சொல்வதை ஏற்க முடியாது. எல்லா கட்சிக்குள்ளும் நிச்சயமாக கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்யும். அதனால் வெற்றி, தோல்வி பாதிக்காது. எந்தக் கட்சியில் கருத்து வேறுபாடு இல்லை. தி.மு.க., அ.தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சியிலும் கருத்து வேறுபாடு இருக்கத்தான் செய்கிறது. இது கட்சிக்கு நல்லதுதான். போட்டி, கூட்டம் எல்லாம் நடக்கும். இது கட்சியை உயிர்ப்போடு வைத்திருக்கும்.
தமிழகத்தில் தேர்தலில் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது கூட்டணி மட்டும்தான். கொள்கை என எதுவும் வெற்றியைத் தீர்மானிப்பதில்லை. பெரிய கூட்டணி வெற்றி பெறும் அவ்வளவுதான். காங்கிரஸ் துடிப்பான கட்சியாக இருக்கவேண்டும். அதற்கு அனைவரையும் அரவணைத்துச் செல்பவர் தலைவராக இருக்க வேண்டும். தன்னிச்சையாகச் செயல்படுபவர் தேவை இல்லை. மூத்த தலைவர்களைக் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். தன்னிச்சையாக இயங்கும் தலைவர்கள் காங்கிரசுக்கு தேவை இல்லை" என்று தெரிவித்துள்ளார்.